ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறதாம்... தேச நலனுக்காக பிரபல இயக்குனர் செய்த அதிரடி... செம கலாய்
ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறது என தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்யும் வகையில் பிரபல இயக்குனர் செய்த காரியம் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான சரிவை தற்போது சந்தித்துள்ளது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வாகனங்கள் மீதான அதிகப்படியான ஜிஎஸ்டி, பொருளாதார மந்த நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் என ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே வாகனங்கள் விற்பனை மீண்டும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பேரில் வாகனங்கள் விற்பனையை அதிகரிக்க தேவையான ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார்.

ஆனால் இது போதுமானதாக இல்லை என்பதே ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது. ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். வாகனங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி தற்போது வரை குறைக்கப்படவில்லை.

எனினும் ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கான ஒரு சில காரணங்களை அவர் தெரிவித்தார்.

அப்போது வாகனங்களின் விற்பனையில் ஓலா, உபர் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. புதிய காருக்கு மாத தவணை செலுத்துவதை பலர் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக தேவைப்படும் நேரங்களில், ஓலா, உபர் கால் டாக்ஸிகளை பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதேபோன்று ஏராளமானோர் நினைப்பதால், வாகன விற்பனை சரிவடையலாம் என்ற ரீதியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். இதில் கொஞ்சம் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் வாகனங்களின் விற்பனை சரிவடைவதற்கு இதுபோல் இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்தை கேலி செய்து மீம்ஸ்களும் உலா வருகின்றன. அதே சமயம் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு மறுபக்கம் ஆதரவும் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. இந்த சூழலில், பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அனுபவ் சின்ஹா செய்துள்ள ட்விட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அனுபவ் சின்ஹா (Anubhav Sinha) பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவருக்கு இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு முகங்கள் உள்ளன. 'ரா ஒன்' மற்றும் 'ஆர்ட்டிகிள் 15' உள்ளிட்ட படங்களின் இயக்குனர் இவர்தான். அனுபவ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை செய்துள்ளார்.

இதில், 'தற்போதுதான் உபர் ஆப்பை டெலீட் செய்தேன். தேசம்தான் முதலில்' என கூறியிருந்தார். அதாவது 'இனிமேல் உபர் கால் டாக்ஸியை பயன்படுத்த மாட்டேன். வாகனங்களின் விற்பனை அதிகரிக்க உதவி செய்வேன்' என நிர்மலா சீதாராமனின் கருத்தை மறைமுகமாக கிண்டல் அடிக்கும் வகையில் அனுபவ் சின்ஹா இந்த ட்விட்டை செய்துள்ளார் என தெரிகிறது.

எனவே இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் இந்த கருத்து நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதற்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








