முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மெர்சலாக்கிய மதுரை அரசு பள்ளி மாணவர்கள்... என்ன செய்தார்கள் தெரியுமா?
மதுரை அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே அதிக வாகனங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே இங்கு போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. ஊரடங்கிற்கு மத்தியிலும் இந்த நகரங்களில் போக்குவரத்து நெரிசலை காண முடிந்தது.

இப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளுக்கு மத்தியில்தான் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக இயங்கி வருகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எப்படி வழி விட வேண்டும்? என்பது குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை.

சில வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்துகின்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இந்த பிரச்னையுடன் சேர்த்து, போக்குவரத்து நெரிசல் பிரச்னையையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக சில சமயங்களில் போக்குவரத்து சிக்னல்களில் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்ளும் அவல நிலையை காண முடிகிறது.

போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும் சமயங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்த சமயங்களில் ஆம்புலன்ஸ் அவ்விடத்தை கடக்க வேண்டியது இருந்தால், காலதாமதம் ஏற்படுகிறது. இது நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடியது. ஆனால் இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தை இரட்டை சகோதரர்கள், இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர். அவர்களின் பெயர் பாலசந்தர் மற்றும் பாலகுமார். இரட்டை சகோதரர்களான இருவரும் மதுரை மாவட்டம் மேலுர் பகுதியை சேர்ந்தவர்கள். மேலூர் அருகே உள்ள வஞ்சிநகரம்தான் இவர்களது சொந்த ஊர். இவர்கள் இருவரும் கண்டுபிடித்துள்ள தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் கவனம் பெற்றுள்ளது.

இவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி, வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணிக்கும்போது, ஆட்டோமெட்டிக் சென்சார்கள் மூலம், அவற்றின் வருகை கண்டறியப்படும். ஆம்புலன்ஸ் வருவது கண்டறியப்பட்டால், சிக்னல் தானாகவே செயல் இழந்து விடும். அதன்பின் 'ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடவும்' என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வரும்.

அதாவது ஒலி மூலம் வாகன ஓட்டிகளுக்கு இந்த தகவல் தெரியப்படுத்தப்படும். நீல நிறத்தில் தனி சிக்னல் உருவாகி, வாகன ஓட்டிகளை முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை இரட்டை சகோதரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவர்கள் இரண்டு பேருக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் விரைவாக பயணம் செய்வதற்கு இந்த தொழில்நுட்பம் உதவும். இதற்காக பாலசந்தர் மற்றும் பாலகுமார் ஆகியோருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். டிவிட்டர் பதிவின் மூலமாக அவர்கள் இருவருக்கும், முதல்வர் தனது பாராட்டுக்களை கூறியுள்ளார்.

இது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டை சகோதரர்கள் பாலசந்தர் மற்றும் பாலகுமார் ஆகிய இருவரும் அரசு பள்ளி மாணவர்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் திறமையை எடுத்துக்காட்டும் வகையில், இந்த இரட்டை சகோதரர்களின் கண்டுபிடிப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








