"படிக்கட்டுல தொங்காத மேலே ஏறு" இனி கண்டெக்டர் சத்தம் போட வேண்டாம்! வரப்போகுது புதிய கருவி!
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்படும் புதிய பஸ்களில் தானியங்கி கதவுகள் இருப்பது போல ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பழைய பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஏற்கனவே பதில் அளித்த நிலையில் முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. பழைய பஸ்களில் ஏன் தானியங்கி கதவுகள் பொருத்தப்படுகின்றன? இதற்கு பின்னால் நடந்த சம்பவங்கள் என்ன என்ற விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சார்பில் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வில் தானாக முன்வந்து பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகமான பஸ்களை இயக்குவது குறித்து வழக்கு ஒன்று நடந்தது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகம் பஸ் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டாலும், பஸ்களில் இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பியது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஓட்டுநர் நடத்துனரை தாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது மிக ஆபத்தான விஷயமாகவும், இந்த விஷயத்தில் போக்குவரத்து கழகங்கள் மிக மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது. மேலும் மாணவர்களின் நலன் கருதி தற்போது உள்ள புதிய பஸ்களில் இருப்பது போல பழைய பஸ்களிலும் ஏன் தானியங்கி கதவுகள் பொருத்தப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியது.

மேலும் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் எத்தனை பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. எத்தனை பஸ்களில் தானியங்கிக் கதவுகள் இல்லாமல் இருக்கிறது என்ற தகவலையும், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் உள்துறை செயலரிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து விதமான பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த தற்போது முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான பணிகள் துவங்க உள்ளதாக கடந்த மே மாதம் 11-ம் தேதியே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது முதல் கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் பணி துவங்கி உள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பஸ்களில் இந்த கதவுகள் பொருத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக விழுப்புரம் கோட்டத்தில் உள்ள பஸ்களில் மட்டும் இது பொருத்தப்பட்டு பின்னர் இது படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் விரைவில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து பஸ்களிலும் இந்த தானியங்கி கதவுகளை நம்மால் காண முடியும்.
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சனை தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சனைக்கு பல்வேறு விதமான தீர்வுக்கான வழியை ஏற்படுத்தினாலும், அது எந்த அளவிலும் பெரிதாக பல பலனளிக்கவில்லை.
இந்நிலையில் தானியங்கி கதவுகளை பொருத்துவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தானியங்கி கதவுகள் மூடினால் மட்டுமே இனி பேருந்துகள் நகரும் என்பதால் கட்டாயம் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு பஸ்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது என்பது படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வதை தடுப்பதற்கு ஒரு நல்ல ஐடியாவாக இருக்கிறது. இதை பொருத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே பயணம் செய்வது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இந்த முயற்சி நிச்சயம் உதவும்.


Click it and Unblock the Notifications








