19 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன?
அவினாசி அருகே இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த கோர விபத்து நடந்தது குறித்து வெளியானத் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன.

பெங்களூரிலிருந்து கோவை, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு கேரள அரசுக்கு சொந்தமான வால்வோ சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த மல்டி ஆக்சில் ரக சொகுசு பஸ்சில் 48 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 3.15 மணியளவில் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்திசையில் அதிக பாரத்துடன் வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டு இழந்து மறுபுற சாலையில் பாய்ந்தது. எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரியுடன் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், கன்டெய்னர் மீது பஸ்சின் வலது பக்கம் மோதி சிதைந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் மருத்துவமனையில் கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையிலும் உயிரிழந்துவிட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

21 பேரின் உயிர்களை காவு வாங்கிய இந்த பயங்கர விபத்திற்கு கன்டெய்னர் லாரியின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் வந்ததே காரணமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டைல்ஸ் கற்கள் ஏற்றப்பட்ட அந்த கன்டெய்னர் லாரியை அவினாசி அருகே உள்ள மேம்பாலத்தில் அதிக வேகத்தில் இயக்கி வந்துள்ளார்.

பாலத்தில் இறங்கும்போது சாலை வளைவாக இருந்ததால், அவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிகிறது, தூக்க கலக்கத்தில் சாலை வளைவாக இருப்பதை கவனிக்காமல் மேம்பாலத்தில் இருந்து இறங்கிய வேகத்தில் ஒரு அடி உயர சாலை தடுப்பை தாண்டி மறுபுற சாலைக்குள் அந்த லாரி பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தடுப்பின் மீது அதிக பாரத்துடன் ஏறி, இறங்கியபோது டயர்களும் வெடித்ததால், குறிப்பிட்ட தூரம் நிலை தடுமாறி ஓடி பஸ்சின் மீது மோதியதாக தெரிகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம், லாரியை இழுத்து வரும் ஜீப் பகுதி சேதமடையவில்லை. பின்புறம் இணைக்கப்பட்டு இருந்த டிரெய்லரில் இருந்த பாரம் ஏற்றப்பட்ட கன்டெய்னரில் பஸ் பலமாக மோதியதால்தான் இந்த அளவுக்கு மோசமான விபத்தை சந்தித்துள்ளது.

நெடுஞ்சாலையில் இரவு நேரம் என்பதால் போக்குவரத்து அதிகம் இல்லாத நேரத்தில் திடீரென கன்டெய்னர் லாரி குறுக்கே பாய்ந்ததால், பஸ் டிரைவராலும் விபத்தை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் இடது பக்க தடத்தை பயன்படுத்துவதற்கு சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள் வலது பக்க தடத்தையே பயன்படுத்துகின்றனர்.

தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்தாலும், இடது புற தடத்தை பயன்படுத்தி இருந்தால், அந்த லாரி மறு புற சாலையில் பாய்ந்திருப்பதையாவது ஓட்டுனர் தடுத்திருக்கலாம். இல்லையெனில், கட்டுப்படுத்துவதற்கு ஓரளவு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஏனெனில், மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது வளைவான சாலையில் இடது புற தடத்தில் வந்திருந்தால் விபத்தை முற்றிலுமாக தடுத்திருக்க வாய்ப்புள்ளது. லாரி ஓட்டுனர் ஹேமராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே முழுமையான காரணம் தெரிய வரும்.

இன்று பெரும்பாலான கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் வலது பக்க தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications








