ராமர் கோவில் பக்தர்களுக்கு எந்த அசவுகரியமும் இருக்க கூடாது!! ஒருபடி மேலே போய் இலவசமாக இரயிலை விடும் பாஜக அரசு!
பாரதிய ஜனதா கட்சி ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில், அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக வருடாந்திர இலவச இரயில் பயண திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. யார் யாரெல்லாம் இந்த இலவச இரயில் திட்டத்தை பயன்படுத்தலாம்? என்பதை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டியெழுப்பப்பட்டு வரும் ராமர் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மட்டுமின்றி, நாட்டின் முக்கிய விவிஐபி-கள் அனைவரும் இந்த ராமர் கோயில் திறப்பில் கலந்துக் கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, அயோத்தியில் பலத்தரப்பட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பக்தர்கள் இலட்சக்கணக்கில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனை சமாளிக்கும் வகையில் அயோத்தியில் இரயில் நிலையம் பெரிய பொருட்செலவில் மறுசீரமைக்கப்பட்டு இருப்பதுடன், அயோத்தியில் புதியதாக விமான நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான வருடாந்திர இலவச இரயில் பயண திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச இரயில் திட்டம் இன்றோ அல்லது நேற்றோ அறிவிக்கப்பட்டது கிடையாது. கடந்த 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் போதே இதனை தேர்தல் அறிக்கையாக பாஜக கட்சி அறிவித்தது.

அதன்பின், பாஜக சட்டீஸ்கரில் ஆட்சியை பிடித்ததை அடுத்து, வருடாந்திர இலவச இரயில் பயண திட்டத்துக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை, சட்டீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு டேயு சாய் அறிவித்துள்ளார். இதன்படி, இந்த இலவச இரயில் திட்டத்தை சட்டீஸ்கர் மாநில சுற்றுலா துறை விரைவில் அமல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தை பொது மக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட யாத்ரீகர்களால் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். இந்த புதிய திட்டத்திற்காக மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. 18 வயதில் இருந்து 75 வயது வரையிலான ராமர் பக்தர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, 55 வயதுக்கு மேல் உள்ள பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமாம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 20,000 பேரை யாத்திரையாக அயோத்திக்கு இலவசமாக இரயிலில் அழைத்துச் செல்ல சட்டீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சட்டீஸ்கரில் இருந்து ஏறக்குறைய 900கிமீ தொலைவிற்கு இரயிலில் பயணம் செய்தால் உத்தர பிரதேசத்தின் அயோத்தியை சென்றடைய முடியும்.
சட்டீஸ்கரில் இருந்து அயோத்தி வரையில் இலவசமாக பயணிக்கலாம் என்றாலும், இடையில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயில் மற்றும் கங்கா ஆர்த்தியையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான ஒப்பந்தம் ஐ.ஆர்.சி.டி.சி உடன் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அயோத்திக்கு செல்லும் பக்தர்களுக்கு சட்டீஸ்கரில் இருந்து வாரத்திற்கு ஒரு சிறப்பு இரயிலை இயக்கவும் இந்தியன் இரயில்வே திட்டமிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் மக்கள் பலர் இரயிலில் முறையாக டிக்கெட் எடுப்பது இல்லை என்கிற கருத்து ஏற்கனவே பரவலாக இருக்கும் நிலையில், இவ்வாறு இலவசமாக இரயில் சேவையை வழங்குவது இரயிலில் டிக்கெட் எடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துமா என்பது மிக பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், இந்த திட்டத்தை பயன்படுத்தி பலர் சட்டத்திற்கு புறம்பாக டிக்கெட் எடுக்காமல் இரயிலில் பயணம் செய்யக்கூடும்.


Click it and Unblock the Notifications









