தமிழக இளைஞர்கள் செய்த அசத்தலான காரியம்... இந்திய அளவில் கவனம் ஈர்த்தது... என்னவென்று தெரியுமா?
தமிழக இளைஞர்கள் செய்த அசத்தலான காரியம் ஒன்று இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்திய மக்களை வேதனைக்குள்ளாக்கி வரும் முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாதது முக்கியமான காரணம். இதுதவிர இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளும் விபத்துக்களுக்கு மற்றொரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.

மேலும் பண்டிகைகளும் கூட சில சமயங்களில் விபத்துக்களுக்கு வழிவகுத்து வருகின்றன. உதாரணத்திற்கு புத்தாண்டு, தீபாவளி பண்டிகை சமயங்களில், குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் நிகழும் விபத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதேபோல் ஆயுதபூஜை பண்டிகையின்போது, திருஷ்டி பூசணிக்காய்களால் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

ஆயுதபூஜையின்போது அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பூஜை செய்து திருஷ்டி பூசணிக்காயை சாலையில் உடைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இது பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குகிறது. சாலை விபத்துக்களுக்கு திருஷ்டி பூசணிக்காய்கள் வழிவகுக்கின்றன என்பதை அதனை உடைப்பவர்கள் உணர்வதில்லை.

இந்த சூழலில் ஆயுத பூஜை பண்டிகை சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே திருஷ்டி பூசணிக்காய்களை சாலையில் உடைப்பது தொடர்பாக காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதில், ''வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திருஷ்டி பூசணிக்காய்களை சாலையில் உடைக்க கூடாது.

இதன் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டால், திருஷ்டி பூசணிக்காயை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டிருந்தது. விபத்தில்லா ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் இதுபோன்ற எச்சரிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாவது வழக்கம்தான். அதன்படிதான் நடப்பு ஆண்டும் காவல் துறையின் எச்சரிக்கை வெளியானது.

ஆனால் மற்ற ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் மக்கள் பலர் அந்த எச்சரிக்கையை மதிக்கவில்லை. வழக்கம் போல நடுரோட்டில் திருஷ்டி பூசணி காய்களை உடைத்தனர். அத்துடன் அவற்றை அகற்றவும் இல்லை. மேலும் சாலைகளில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணி காய்களை அப்புறப்படுத்துவதில் அரசு துப்புரவு பணியாளர்களும் முனைப்பு காட்டவில்லை.

இருந்தபோதும் திருஷ்டி பூசணி காய்களால் ஏற்படும் ஆபத்துக்களை கருத்தில் கொண்டு, அவற்றை அகற்றும் பணியில், இளைஞர்கள் சிலர் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதபூஜையையொட்டி சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் திருஷ்டி பூசணிகாய்கள் உடைக்கப்பட்டன. ஆனால் அவற்றை வழக்கம் போல யாரும் அப்புறப்படுத்தவில்லை.

எனினும் சேவகன் எனும் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சேலம் மாநகரில் வீதி வீதியாக வலம் வந்து சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணி காய்களை அகற்றினர். சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உடைக்கப்பட்ட பூசணி காய்கள், சேவகன் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் அகற்றப்பட்டன.

இதன் மூலம் சேலம் மாநகரில் ஏராளமான சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் போக்குவரத்திற்கு ஏற்பட்டிருந்த இடையூறும் நீங்கியது. பொதுநலன் கருதி செய்யப்பட்ட இந்த சேவையின்போது இளைஞர்கள் யாரும் முகம் சுளிக்கவில்லை. அவர்களின் இந்த நடவடிக்கை இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. எனவே பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








