பாகுபலி பல்வாள் தேவனின் கத்தி சுழலும் ரதத்தின் தாக்கத்தால் உருவான ‘பல்லாள’ குப்பை அள்ளும் வாகனம்..!!
பாகுபலி படத்தை பார்த்து சாலை சுத்தம் செய்யும் வாகனத்தை தயாரித்த சத்தீஸ்கரின் ராய்பூர் பகுதி மக்கள்.
பாகுபலி படத்தில் இடம்பெற்ற கத்தி சுழலும் ரதத்தை பார்த்து, அதேபோன்று குப்பைகளை அகற்றும் வாகனம் ஒன்றை தயாரித்துள்ளனர் சத்தீஸ்கர் மாநில மக்கள் சிலர்.

பாகுபலி திரைப்படத்தின் வெற்றி நமது கோலிவுட் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் பலரை அதேபோன்ற ஒரு வரலாற்று படத்தை எடுக்கும் ஆவலை தூண்டியுள்ளது.

இது இப்படி என்றால், அந்த படத்தை பார்த்து அதற்கு அடிமையான ரசிகர்கள் பலர், பாகுபலி காட்சிகளை மீம்ஸ் செய்து, அதை இணையதளங்களில் பதிவிட்டு டிரென்டாக்கி வருகின்றனர்.

இதுபோன்ற விசித்தர சம்பவங்களுக்கு மாற்றாக, பாகுபலியில் கத்தி சுழலும் ரதத்தை போன்று ஒரு வாகனத்தை உருவாக்கி, அதை நல்ல காரியத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் சத்தீஸ்கரின் ராய்பூர் மாவட்ட மக்கள்.

சாலைகளை சுத்தம் செய்யும் வாகனம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பது ராய்பூரின் துர்க் மாநகராட்சி மன்ற தலைவரான ராஜ்குமார் நாராயணியின் கனவு.

எல்லோரையும் போல ராஜ்குமாரும் பாகுபலி படத்தை பார்த்தார். அதில் வில்லன் பல்வாள் தேவன் போர் காட்சியின் போது பயன்படுத்தும் கத்தி சுழலும் ரதத்தை பார்த்ததும் அவருக்கு சிறு பொறி தட்டியது.

உடனே, துருக் மாநகராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நாராயணி, தனது ஊர் மக்களுடன் இணைந்து, சாலைகளை சுத்தம் செய்யும் வாகன தயாரிப்பில் இறங்கினர்.

இதற்காக கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு மினிவேனில் அச்சு சுழற்சி முறையில் இயங்கும் மோட்டாரை பொருத்தி, அதன் மேல் எட்டு இரும்பு கைப்பிடிகள் இணைக்கப்பட்டன.
அந்த எட்டு கைப்பிடிகளின் முணைகளில் தென்னங்கீற்றால் தயாரிக்கப்படும் துடைப்பங்கள் கெட்டியாக கட்டப்பட்டன.

பிறகு இயந்திரத்தை இயக்கிய போது, அது அச்சு சுழற்சி முறையில் இயங்கும் இயந்திரத்தால் துடைப்பங்கள் சுத்தி சுத்தி, சாலைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தன.

இந்த முயற்சி வெற்றி அடைந்ததால் உற்சாகமடைந்த துருக் பகுதி மக்கள் மற்றும் மாநகராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் நாராயணி, இந்த வாகனத்திற்கு 'பல்லாள' என்ற பெயர் வைத்தனர்.

பாகுபலி படத்தின் இந்த பதிப்பில் வில்லன் பல்வாள் தேவனின் பெயர் பல்லாள தேவ். அவனது வாகனத்தின் தாக்கத்தால் இந்த சாலையை சுத்தம் செய்யும் வாகனம் தயாரிக்கப்பட்டதால் இதற்கு துருக் பகுதி மக்கள் ‘பல்லாள' என்று பெயர்வைத்துள்ளனர்.

குப்பைகளை அகற்றும் இயந்திரங்களின் விலை இன்று பன் மடங்கு உயர்ந்துவிட்டது. அதை பரமாரிக்கவும் மிகவும் சிரமம்.
இதுபோன்று எந்த இடர்பாடுகளுமின்றி மிக எளிய முறையில் பல்லாள வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் துருக் மாநகராட்சி ஆணையர் எஸ்.கே. சுந்தரேனி.

சோதனை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள 'பல்லாள குப்பை அள்ளும் வாகனத்திற்கு' இதுவரை ரூ.60,000 வரை செலவாகி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனுடைய செயல்பாடுகள் துருக் மாநகராட்சியில் வெற்றி அடையும் பட்சத்தில் பேட்டரிகளை கொண்டு இயங்கும் விதத்தில் கூட மேலும் பல 'பல்லாள குப்பை அள்ளும் வாகனங்கள்' தயாரிக்கப்படும் என்று கூறுகிறார் ஆணையர் எஸ்.கே. சுந்தரேனி.
via TOI


Click it and Unblock the Notifications








