“விமான நிலையத்துக்கு இணையான குஜராத் பேருந்து நிலையம்” - வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
குஜராத்தில் கட்டப்படவிருக்கும் புதிய பேருந்து நிலையத்தின் புகைப்படத்தை பகிர்ந்த மத்திய அமைச்சரை சமூக வலைத்தளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.அது குறித்த தகவல்களை காணலாம்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 150 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட உள்ளது. தற்போது இந்த பேருந்து நிலையத்தின் புகைப்படங்களால் பாஜக மத்திய அமைச்சர் ஒருவர் தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்.

பேருந்து நிலையத்தின் படங்களுக்கும் பாஜக அமைச்சருக்கும் என்ன சம்பந்தம் என குழம்ப வேண்டாம். இது குறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

அனைத்து சர்ச்சைகளுக்கும் மையப்புள்ளியாக இருப்பது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம் தான்.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது. ஒரு விமான நிலையத்தை மாடலாக கொண்டு இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

எட்டு மாடியில் கட்டப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் மால், உணவகம், தியேட்டர் போன்ற பல வசதிகள் அமைய உள்ளன.

இந்த பேருந்து நிலையத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகியுள்ளது.

புதிய பேருந்து நிலையத்தின் புகைப்படங்களை பாஜகவின் மத்திய அமைச்சரான பபுல் சுப்ரியோ உள்ளிட்ட சில பிரபலங்களும் பகிர்ந்தனர். இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஹிந்தி பாடகரான பபுல் சுப்ரியோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வென்று தற்போது மத்திய கணரக தொழில்துறை அமைச்சராக பதவியில் உள்ளார்.
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த பேருந்து நிலையத்தின் புகைப்படத்தை பகிர்ந்த சுப்ரியோ "இது லண்டன், நியூயார்க் நகரில் உள்ள விமான நிலையம் அல்ல, இது குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம்" என குறிப்பிட்டார்.

பேருந்து நிலைய புகைப்படங்களை விட அமைச்சர் சுப்ரியோவின் வார்த்தைகளே சமூகவலைத்தள வாசிகளை அதிகம் சீண்டியுள்ளது.

உண்மை என்னவென்றால், ராஜ்கோட்டில் புதிய பேருந்து நிலையமே திறக்கப்படவில்லை அது அமைக்கப்பட இருக்கும் பேருந்து நிலையத்தின் மாதிரி படங்களே.

ஏப்ரல் முதல் வாரத்தில் தான் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் அமைச்சர் சுப்ரியோவோ ஏப்ரல் 19ஆம் தேதியே பேருந்து நிலையம் திறக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டு பதிவிட்டார்.
இது போதாதா? சாதாரண மக்களுக்கு கூட தெரிந்த விஷயம் அமைச்சருக்கு தெரியாதா என கேள்வி கேட்டு சுப்ரியோவை வருத்து எடுக்க துவங்கிவிட்டனர்.

மீம் கிரியேட்டர்களோ ஒரு படி மேலே சென்று காட்டுத்தனமாக கலாய்த்து வருகின்றனர்.
தற்போது டிவிட்டர் வாசிகள் பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விஷயம் அறிந்த சுப்ரியோவோ தனது பள்ளி நண்பர் ஒருவர் பதிந்ததைத் தான் தானும் பதிந்துவிட்டதாக வெள்ளந்தியாக கூறினார். இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார் பபுல்.


Click it and Unblock the Notifications








