பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம்ன்ற கனவுல இருக்கிறீர்களா? ஓப்பனா இதற்கு விசாரணை நடத்தனும்!!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்திற்கு பெரிய களங்கமாக, சமீபத்தில் மும்பைக்கு அருகே நடந்த சேத்தக் (Chetak) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து அமைந்தது. நடுரோட்டில் இயங்கி கொண்டிருந்த போது சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்ததை அடுத்து, ஸ்கூட்டரின் உரிமையாளர் அதுகுறித்து கேள்வி எழுப்பினார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான மக்களின் சந்தேகத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பது போல் அமைந்த இந்த சம்பவத்திற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது விளக்கத்தை அளித்துள்ளது. தகுந்த விசாரணைகளுக்கு பிறகு பஜாஜ் நிறுவனம் அளித்துள்ள இந்த விளக்கத்தை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் மீது இன்னும் மக்கள் அனைவருக்கும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. அதற்கு காரணம், கடந்த வருடங்களில் நடைபெற்ற எலக்ட்ரிக் வாகனங்களின் தீப்பிடிப்பு சம்பவங்கள் ஆகும். ஆரம்பத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிகமாக ஏற்பட்டுவந்த தீ விபத்துகள், அதன்பின் எலக்ட்ரிக் கார்களிலும் ஏற்பட ஆரம்பித்தன.

ஆனால், அதன்பின் எலக்ட்ரிக் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட புது, புது ஆராய்ச்சிகளினால் எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது வெகுவாக குறைந்துவிட்டது என்றாலும், இப்போதும் நாட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி கொள்கின்றன. குறிப்பாக, அதிக சூடான பகுதியில் தார் சாலையில் செல்லும்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்புக்கு உள்ளாகுகின்றன.
சமீபத்தில் நடந்த பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்தும் அவ்வாறு நடுரோட்டில் இயங்கிக் கொண்டிருந்த போது நடந்ததே ஆகும். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் சூடான மதிய வேளையில் நடந்த இந்த தீ விபத்து உடனடியாக சுற்று வட்டார பகுதிகளிலும், இணையத்திலும் வைரலாகியது. தீ விபத்தை தொடர்ந்து, தங்களது டீலர் பார்ட்னர் உடனடியாக சேதமடைந்த சேத்தக் ஸ்கூட்டரை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு சென்றதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் எவர் ஒருவருக்கும் காயமில்லை. ஏனெனில், இந்த தீ விபத்தில் தீ எதுவும் வெளிவரவில்லை; வெள்ளை நிறத்தில் புகை மட்டுமே வெளிவந்தது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தீ விபத்திற்கு உள்ளான சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் நல்லப்படியாக அப்படியே உள்ளது.
அப்படியென்றால், புகை வெளிவந்ததற்கு காரணம், அதிக வெப்பத்தினால் ஸ்கூட்டரில் இருந்த பிளாஸ்டிக் பாகம் ஒன்று உருகியது ஆகும். பேட்டரி பேக்கில் மெட்டீரியல்கள் அனைத்தும் கடினமான சூழ்நிலைகளிலும் பாதுகாப்பை வழங்கக்கூடியவைகளாக பயன்படுத்தப்படுவதாக கூறும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயர் தரத்திலான தயாரிப்புகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அவற்றையும் தாண்டி நடந்துள்ள இந்த தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சாத்தியமான சிக்கல்களை புரிந்துக் கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் முழுமையாக உறுதிக் கொண்டுள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்திலும் பஜாஜ் தீவிரமாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் 3 லட்சத்திற்கும் அதிகமான சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சாலையில் இயங்கி கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாகவும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளன. ஆனால், பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்ததாக இதற்குமுன் எந்தவொரு செய்தியையும் பார்த்ததில்லை. எனவே, சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இவ்வாறான சம்பவத்திற்கு உள்ளானது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறை ஆகும். முதல் பிரச்சனையையே பஜாஜ் உடனடியாக அடையாளம் கண்டு, அதனை விரைவாக சரிசெய்ய முயற்சிப்பது உண்மையில் பாராட்டத்தக்கது ஆகும்.


Click it and Unblock the Notifications









