பைக்கை பார்த்ததும் பதறிப்போன ஊழியர்கள்... உடனே கூடிய கூட்டம்!! பஜாஜ் நிறுவனத்துக்கு தான் நன்றி சொல்லனும்!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். கடந்த காலங்களில் இருந்து பல்வேறு புதிய முயற்சிகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், சமீபத்தில் மொத்த இந்தியாவும் பெருமைப்படும் வகையில் ஒரு காரியத்தை பஜாஜ் செய்துள்ளது. அதுதான், இந்தியாவின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் ஆகும். அதாவது, பெட்ரோலுக்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய வகையில் பைக்கை உருவாக்கி ஃப்ரீடம் 125 (Freedom 125) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கிற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. ஆனால், புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆதலால், இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் மக்களின் கைக்கு இன்னும் வந்து சேரவில்லை. ஆனால், கருத்து கணிப்புகளை வழங்க சமூக ஊடகங்களுக்கும், இதர பணிகளுக்காகவும் சில பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்குகள் பொது சாலைக்கு வந்துள்ளன.

தோற்றத்தை பொறுத்தவரையில், மற்ற பைக்குகளுக்கும் ஃப்ரீடம் 125 பைக்கிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் கிடையாது. குறிப்பாக, பஜாஜ் பிளாட்டினா பைக்கை போன்று இதன் தோற்றம் உள்ளதால், ஃப்ரீடம் 125 பைக்கை பார்க்கும் பொது மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கை வாங்குபவர்கள் கெத்துக்காட்ட போகும் இடம் பெட்ரோல் பங்குகளில் ஆகும்.
மற்ற பைக் ஓட்டிகள் பெட்ரோலை நிரப்ப வரிசையில் நின்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஃப்ரீடம் 125 பைக்கை வைத்துள்ளவர்கள் மட்டும் பெட்ரோல் பங்க்கில் சிஎன்ஜி நிரப்பும் பகுதியை நோக்கி செல்வர். அத்தகைய சமயத்தில், சுற்றி இருப்பவர்கள் எவ்வாறு உங்களை பார்ப்பார்கள் என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

புனேவில், பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கை சிலர் ஓட்டி பார்த்து தங்களது விமர்சனங்களை வழங்க கொண்டு சென்றுள்ளனர். அதாவது, அந்த பைக் அவர்களுக்கு சொந்தமானது கிடையாது. அவ்வாறு பைக்கை கொண்டு செல்லும் வழியில் சிஎன்ஜி நிரப்பும் பகுதியை பார்த்ததும் பைக்கிற்கு சிஎன்ஜி-ஐ நிரப்பிக் கொள்ள விரும்பியுள்ளனர். அதன்படி, பைக் அந்த நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்த நிலையத்தில் இருந்தவர்கள் தங்களிடம் பைக் ஒன்று வருவதை பார்த்ததும், மெல்லிய புன்முறுவலுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது உண்மைதானா... என தெரியாமல் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் இது பஜாஜ் உருவாக்கிய இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக் என தெரியவந்ததும் சிஎன்ஜி நிரப்பும் குழாயை பைக்கில் செலுத்தி சிஎன்ஜி-ஐ நிரப்பி உள்ளனர்.

இதனை சுற்றி இருந்தவர்கள் விசித்திரமாக பார்த்ததும், ஃப்ரீடம் 125 பைக்கை அங்கு கொண்டு சென்றவர்கள் தங்களை கெத்தாக உணர்ந்த தருணம் அது. சிஎன்ஜி நிரப்பும் ஊழியர்கள் உள்பட சுற்றி இருந்தவர்கள் இந்த பைக் எவ்வாறு இயங்குகிறது? சிஎன்ஜி டேங்க் எங்கே உள்ளது? என கேள்விகளால் துளைத்தெடுத்து உள்ளனர். பின்னர், பைக்கின் இருக்கையை கழற்றி, அடியில் இருந்த சிஎன்ஜி டேங்கை காட்டியதும் சுற்றியிருந்த அனைவரும் அதிசயமாக பார்ப்பதை இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
சிஎன்ஜி-ஐ நிரப்பும்போது பைக்கில் இருந்து தள்ளி நிற்கும்படி யாரும் கூறவில்லை. ஆனால், அத்தகைய நேரத்தில் சில அடி தூரம் தள்ளி நிற்பது நல்லது. சிஎன்ஜி-இல் இயங்கும் கார்களில் ஜன்னல்கள் அனைத்தையும் மூடியிருக்கும்போது சிஎன்ஜி வாயுவின் வாசனையை லேசாக நுகர முடியும். ஆனால், திறந்த வெளியாக உள்ளதால், இந்த சிஎன்ஜி பைக்கில் அவ்வாறு எந்த வாசனையும் வரவில்லை என வீடியோவை பதிவிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் மார்க்கெட்டில் வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்திய 2-வீலர் மார்க்கெட்டில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பது மட்டும் உறுதி. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பைக்கை தேவைப்பட்டால் பெட்ரோலிலும் இயக்க முடியும்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









