ஒரு செகண்ட்தான்! பைக் ஓட்டும்போது இளைஞர் செய்த காரியத்தால் நடந்த பயங்கரம்! நம்ம எல்லாருக்கும் இது ஒரு பாடம்!
பைக் ரைடர்களின் அஜாக்கிரதையால், இந்திய சாலைகளில் தினந்தோறும் ஏராளமான விபத்துக்கள் (Accidents) அரங்கேறி வருகின்றன. இதில் பல்வேறு விபத்துக்களின் வீடியோக்களும் (Videos) வெளியாகின்றன. சம்பவ இடத்தில் இருக்க கூடிய சிசிடிவி கேமராக்களிலும், கார்களில் இருக்க கூடிய டேஷ்போர்டு கேமராக்களிலும் பதிவாகும் இந்த காட்சிகள் நமக்கு படிப்பினையை வழங்குகின்றன.
இந்த வரிசையில் காரின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, பைக் ஓட்டுபவர்களுக்கு எல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) பைக்கில் வந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

அவருக்கு முன்னால் கார் ஒன்று, மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் டிரைவர் ஏதோ ஒரு காரணத்தால் திடீரென பிரேக் பிடித்தார். அந்த நேரத்தில் பின்னால் பஜாஜ் பல்சர் பைக்கில் வந்து கொண்டிருந்த இளைஞர், தனது கையில் அணிந்திருந்த க்ளவுஸை கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்.
எனவே காரின் டிரைவர் பிரேக் பிடித்ததை அவர் சரியாக கவனிக்கவில்லை. அவரது கவனம் எல்லாம் க்ளவுஸை கழற்றுவதில் சென்று விட்டது. இதன் காரணமாக காரின் பின் பகுதியில் பஜாஜ் பல்சர் பைக் மோதியது. இதில் அந்த இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

நல்ல வேளையாக அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து நிகழ்ந்த உடனேயே அந்த வழியாக வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, கீழே விழுந்த இளைஞருக்கு உதவி செய்ய சென்றது நல்ல விஷயம் ஆகும்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 2 விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இளைஞர்தான் விபத்திற்கு முழு முதற்காரணம் என்பது வீடியோவை பார்க்கும்போதே நமக்கு தெளிவாக புரிகிறது.
முதலில் காரின் டிரைவர் மிதமான வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் சென்ற வாகனங்கள் பிரேக் பிடித்த காரணத்தால், அவரும் பிரேக் பிடித்திருக்கலாம். அந்த நேரத்தில் பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இளைஞர், சாலையை கவனிக்காமல், க்ளவுஸை கழற்றுவதில் குறியாக இருந்தார். பைக்கை ஓட்டி கொண்டே இதை செய்ததுதான் அவரது தவறு.
இதன் காரணமாகவே காரின் டிரைவர் பிரேக் பிடித்ததும், அவரால் பைக்கை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை. பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அவர் க்ளவுஸை கழற்றியிருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால், இந்த விபத்தே நிகழ்ந்திருக்காது. இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கார் டிரைவர் செய்த காரியம் ஆகும்.
விபத்திற்கு அவர் காரணம் இல்லை என்பது நமக்கு புரிகிறது. ஆனால் கீழே விழுந்த இளைஞருக்கு என்ன ஆனது? என்பதை அவர் பார்க்க கூட இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நமக்கு கிடைத்துள்ள வீடியோவில், விபத்து நடந்த பிறகும் கூட, கார் தொடர்ச்சியாக பயணித்து கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவின் அடிப்படையில் பார்த்தால், விபத்து நடந்த பிறகு, கார் டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். ஒருவேளை ஓரமாக நிறுத்தி விட்டு வந்து, இளைஞருக்கு என்ன ஆனது என்பதை அவர் பார்த்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் விபத்துக்கள் நடைபெற்றால், அதற்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் சிறந்த மனித நேயமாக இருக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் அல்லது கார் என எந்த வாகனமாக இருந்தாலும், அதை நாம் ஓட்ட தொடங்கி விட்டால், கவனம் முழுவதும் சாலையில்தான் இருக்க வேண்டும். கவன சிதறல் ஏற்படவே கூடாது. ஒரு வினாடி ஏற்படும் கவன சிதறல் கூட, மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications