விமானிகள் இனி டூத்பேஸ்ட் பயன்படுத்த தடை! காரணத்தை கேட்டா நீங்களே தடை போட சொல்லுவீங்க!
இந்தியாவில் இனி விமானிகள் மௌத் வாஷ், டூத் ஜெல்,டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மது போதை குறித்த சோதனையின் போது இது தவறான முடிவுகளை காட்டும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலையில் செல்லும் கார் பைக் ஓட்டிகளே மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தின் படி மது போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துக்கள் இவ்வாறான மது போதை காரணமாகவே நடப்பதாக நமக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

சாலையில் செல்லும் வாகனங்களுக்கே இப்படி என்றால் பறக்கும் விமானங்களுக்கு? ஆம் இந்தியாவில் விமான ஓட்டிகள் விமான பயணத்தின் போது மது போதையில் இருக்கக் கூடாது என சட்டம் இருக்கிறது. இதற்காக விமான ஓட்டிகள் ஒவ்வொரு முறையும் தன் பணியை துவங்கும் போதும் அவர்கள் மது போதையில் இருக்கிறார்களா என சோதனை செய்து அதன் பின்பு தான் அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இப்படியான சோதனையில் சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட வருகிறது. விமான ஓட்டிகள் மது அருந்தாமல் அவர்கள் வாயை புத்துணர்வு செய்ய மெளத்வாஷ் அல்லது டூத் ஜெல் அல்லது டூத் பேஸ்ட் கொண்டு பல் விலக்கி விட்டு வரும்போது அவர்கள் மது போதையில் இருப்பதாக பிரீத் அனலைஸர் கருவி காட்டுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் உள்ளிட்ட வேதியல் பொருட்களில் ஆல்கஹால் கலந்திருக்கும்.

இந்த ஆல்கஹால் உடலுக்கு உள்ளே சென்று எந்தவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றாலும் வாய்ப்பகுதியிலிருந்து காற்று வெளியேறும் போது ஆல்கஹால் கலந்த காற்று தான் வெளியில் வரும். இதனால் பிரீத் அனலைஸர் டெஸ்ட் எடுக்கும்போது இவர்கள் மது போதையில் இருப்பதாக காட்டுகிறது. இவ்வாறான தவறான முடிவுகள் வரும் போது அதை வைத்து விமானிகளை விமானம் ஓட்ட அனுமதிப்பது என்பது சட்ட ரீதியிலாக சிக்கலாக உள்ளது.
இதையஎடுத்து பயணிகள் விமான இயக்குனரகம் தற்போது புதிய விதிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி விமான ஓட்டிகள் இந்தியாவிற்குள் விமானம் ஓட்டும் போது யாரும் இது போன்ற ஆல்கஹால் கலந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அவர்கள் பயன்படுத்தியது தெரிய வந்தால் அவர்கள் விமானம் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாடுகளிலிருந்து ஒரு விமானம் கிளம்பி இந்தியாவில் திரையறங்கி மீண்டும் இந்தியாவிலிருந்து கிளம்பி வெளிநாட்டிற்கு செல்லும் படியான திட்டமிருந்தால் அந்த விமான ஓட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக தரையிறங்கிய பின்பு இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் அவர்கள் ஆல்கஹால் உட்கொண்டு அதன் போதையில் இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது அவர்கள் செய்யும் குற்றம் மற்றும் எத்தனையாவது முறையாக ஒரே குற்றத்தை செய்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெளத் வாஷ் பயன்படுத்தாமல் எப்படி விமானியால் தன்நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்ற கேள்விபலருக்கு வரலாம். ஆனால் இந்த வழியை பயன்படுத்தி சில விமானிகள் மது போதையில் விமானத்தை இயக்க செல்ல கூட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காகவே விமானிகளுக்கு இந்த ஆல்கஹால் கலந்த மெளத் வாஷ், டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மது போதையில் டூவீலர் கூட ஓட்டக்கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையில் விமானங்கள் பல உயிர்களை சுமந்து செல்லும் முக்கியமான போக்குவரத்து வசதியாகும். இது எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் விண்ணில் பறக்கிறது. இதனால் இதை ஓட்டும் விமானி எந்த நேரத்திலும் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். அதனால் அவர் மது போதையில் இருக்கக் கூடாது. இதற்காக அரசு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டுகுரியது.


Click it and Unblock the Notifications









