1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில் தொழிலதிபர் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க
1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரில், தொழிலதிபர் செய்த காரியம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்காத எந்தவொரு வாகனத்தையும் எந்தவொரு ஆர்டிஓ அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. எனவே கடைசி நேரத்தில் பிஎஸ்-4 வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

அத்துடன் தங்களிடம் உள்ள பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு டீலர்ஷிப்கள், சிறப்பு தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கின. ஆனால் பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த ஏப்ரல் 1ம் தேதி, இந்தியாவில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாத கடைசியில் திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதற்காக, ஒரு சில இடங்களில் மட்டும், 10 நாட்கள் கூடுதல் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes-Benz GLS) காரை, பதிவு செய்யாமல் இயக்கி, தற்போது சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார்.

இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் லக்ஸரி எஸ்யூவி ரக கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஸ் மாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமான வாகன சோதனையின்போது நிறுத்தி விசாரிக்கப்பட்டதில், இந்த கார் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அதிகாரிகள் அந்த காரை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரின் உரிமையாளர், தற்காலிக பதிவு எண்ணை, (Temporary Number) நிரந்தர பதிவு எண்ணாக மாற்றி, காரை ஓட்டி வந்துள்ளார். எனவே நிரந்தர பதிவு எண் இல்லாமல் ஓட்டிய குற்றத்திற்காக, ஆர்டிஓ அந்த காரை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

அந்த காரின் உரிமையாளர் 88 லட்ச ரூபாயை எக்ஸ் ஷோரூம் விலையாக செலுத்தியுள்ளார். இதன்பின் KA-05-TMP-9861 என்ற நம்பர், அவருக்கு டெம்ப்ரவரி பதிவு எண்ணாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த காரின் உரிமையாளர் இந்த எண்ணையே நிரந்தர பதிவு எண்ணாக பயன்படுத்த தொடங்கியுள்ளார். ஆர்டிஓ அலுவலகத்தில் காரை பதிவு செய்யவே இல்லை.

இதனால் அபராத தொகையையும், பதிவு கட்டணமான 20 லட்ச ரூபாயையும் செலுத்தும்படி அந்த காரின் உரிமையாளருக்கு, ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த காரை தற்போது பதிவு செய்ய முடியாது. தற்போதைய புதிய விதிகளின்படி, பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணங்காத எந்தவொரு தனியார் வாகனத்தையும் பதிவு செய்ய முடியாது.

இது பிஎஸ்-4 வாகனமாக இருப்பதால், ஆர்டிஓவால் இந்த காருக்கு நிரந்தர பதிவு எண்ணை வழங்க முடியாது. எனவே இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும். இந்த காரை ஆர்டிஓ பதிவு செய்ய வேண்டுமா? என்பதை அங்கு நீதிபதி முடிவு செய்வார். இந்தியாவிலேயே சாலை வரி அதிகமாக விதிக்கப்படும் மாநிலங்களில், கர்நாடகாவும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதிகப்படியான வரி காரணமாக, பெரும்பாலானோர் தங்கள் கார்களை மற்ற மாநிலங்களில் பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். எப்படியாயினும் வாகனத்தை பதிவு செய்யாமல் இயக்குவது குற்றமாக கருதப்படும். பதிவு எண் இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்ட விரோதமானது. இந்த குற்றத்தை செய்பவர்களின் வாகனத்தை அதிகாரிகளால் பறிமுதல் செய்ய முடியும்.

மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கும் ஒரு சிலர், வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக அல்லது குறைப்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். பதிவு செய்தையே தவிர்ப்பது அல்லது வெளி மாநிலங்களில் பதிவு செய்வது போன்றவை அதற்கு ஒரு சில உதாரணங்கள். இதன் காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








