பெங்களூர்ல கேப் ஓட்டினாலே இவ்ளோ சம்பாதிக்கலாமா! ஐடி ஊழியர்களையே தூக்கி சாப்பிடலாம்! முன்னாடியே தெரியாம போச்சே!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore), நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருகிறது. வேலைவாய்ப்புகள் கொட்டி கிடப்பதால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் பெங்களூர் நகரில் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப, பெங்களூரில் கேப்களின் (Cabs) எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஓலா (Ola), உபேர் (Uber), ரேபிடோ (Rapido) மற்றும் ப்ளூஸ்மார்ட் (BluSmart) என ஏகப்பட்ட நிறுவனங்கள், பெங்களூர் நகரில் கேப் சேவைகளை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக பெங்களூர் நகரில் கேப் டிரைவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இவர்களுக்கு எல்லாம் வருமானம் குறைவாக இருக்கும் என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், உடனே உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் பெங்களூர் நகரில் ஒரு சில கேப் டிரைவர்கள், ஐடி ஊழியர்களை விட அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

ரெடிட் (Reddit) இணையதளத்தில் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கேப் மூலம் திரும்பி கொண்டிருந்தேன். அப்போது கேப் டிரைவரிடம் அவரது வருமானம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.
இதற்கு கேப் டிரைவர், ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக கூறினார். இது எனக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியது. ஏனெனில் இது எரிபொருள் உள்ளிட்ட இதர செலவுகள் போக கிடைக்கும் வருமானம் ஆகும்.

அவர் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக வைத்து கொள்வோம். ஒரு மாதத்தில் அவர் 25 நாட்கள் வேலை செய்தாலே, 75 ஆயிரம் ரூபாயை வருமானமாக ஈட்டி விடுவார். இதுதவிர ஓலா நிறுவனத்திற்கு தனியாகவும் அவர் கேப் ஓட்டுகிறார். அதன் மூலமும் அவருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
வருமானம் நன்றாக இருப்பதால், தனது குழந்தைகள் அருமையான ஒரு பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக அந்த டிரைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். முன்பு செய்து வந்த வேலையை இழந்த பிறகு, கடந்த 2019ம் ஆண்டில் இருந்து கேப் டிரைவராக வேலை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கேப் டிரைவர்களால் இவ்வளவு வருமானம் ஈட்ட முடியுமா? என்று பலரும் சந்தேகப்படலாம். ஆனால் இது உண்மையில் சாத்தியம்தான். எரிபொருள், காருக்கான இஎம்ஐ, பராமரிப்பு மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட செலவுகள் எல்லாம் போக, மாதம் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய டிரைவர்களும் பெங்களூரில் உள்ளனர்.
கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய 2 விஷயங்களும் இருந்தால், கேப் டிரைவராக வேலை செய்தாலும் கூட, பெங்களூரில் நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஆனால் பெங்களூரில் கேப் டிரைவராக வேலை செய்வதில் ஒரு பெரிய பிரச்னை உள்ளது. அது போக்குவரத்து நெரிசல் ஆகும். பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் உலக புகழ்பெற்றது.
இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னையை கையாள வேண்டுமென்றால், பொறுமையை வளர்த்து கொள்வது அவசியம். இந்த பொறுமை இருக்கும்பட்சத்தில், கேப் டிரைவர்களாக வேலை செய்வதற்கு பெங்களூர் ஏற்ற இடம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இதன் காரணமாகவே பல மாநிலங்களை சேர்ந்த டிரைவர்களும், பெங்களூருக்கு படையெடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








