முதல்முறை விதிமீறலுக்கும் லைசென்ஸ் சஸ்பென்ட்... பெங்களூர் போலீஸ் அதிரடி!
போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பெங்களூர் பெருநகர போலீசார் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அப்படியும் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்தபாடில்லை.
எனவே, விதிமுறைகளை கடினமாக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, இனி முதல்முறையாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர். அதன் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மொபைல்போனில் பேச்சு...
வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மொபைல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அது தெரிந்தும் மொபைல்போனில் பேசியபடி, வாகனத்தை ஓட்டுவோர் முதல்முறையாக விதிமீறினாலும், 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 185ன் படி, அவர்களது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது வீதியில் சாகசம்
பொது போக்குவரத்து சாலைகளில் பைக் மற்றும் கார்களில் வீலிங் சாகசங்கள் மற்றும் ரேஸ் விடுவது போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 20 மற்றும் 184ன் 21வது விதிப்படி டிரைவிங் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்முறையாக இந்த விதிமீறலில் ஈடுபட்டாலும் இந்த நடவடிக்கை பாயும்.

நடைமேடையில் டிரைவிங்
இது தற்போது பல சாலைகளில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பல டூ வீலர்களுக்கு பாதசாரிகளுக்கான நடைபாதைதான் ஷார்ட் கட் ரூட். இனி இதுபோன்று பாதசாரிகளுக்கான நடைபாதையில் வாகனங்களை செலுத்துவோரின் டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்முறை என்று கெஞ்சினாலும் இனி விடப்போவதில்லை என்று பெங்களூர் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
Photo Credit: ichangemycity

ஹிட் அண்ட் ரன் கேஸ்
மோதிவிட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளின் லைசென்ஸும் தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் 134 சட்டத்தின்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிபோதை டிரைவிங்
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 185வது பிரிவுபடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதர விதிமீறல்கள்
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யும் டாக்சி மற்றும் ஆட்டோரிக்ஷாக்கள், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்வற்றிற்கும் இந்த நடவடிக்கை பாயும் என்று பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








