யாரென்றே தெரியாத பெண்ணுடன் நடுரோட்டில் அட்டகாசம் செய்த வாலிபரின் வீடியோ வைரல்... அதிர்ச்சி பின்னணி
யாரென்றே தெரியாத பெண்ணுடன் நடுரோட்டில் அட்டகாசம் செய்த வாலிபரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்குகளில் 'ஸ்டண்ட்' செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பல இளைஞர்கள் பைக் ஸ்டண்ட் என்ற விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, பைக் ஸ்டண்ட் செய்வதில் தவறில்லைதான்.

பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடுபவர்கள் ஹெல்மெட், க்ளவுஸ், பேட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது அவசியம். ஒருவேளை துரதிருஷ்டவசமாக விபத்து அசம்பாவிதம் நிகழ்ந்தால், இவை உங்கள் உயிரை காப்பாற்றும்.

அத்துடன் பிறருக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் பைக் ஸ்டண்ட் செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்வதும் முக்கியமானது. பொது சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்தால், அது உங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆனால் ஒரு சில இளைஞர்கள் இதனை புரிந்து கொள்வதில்லை. ஹெல்மெட் உள்பட எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல், பொது சாலையில் பைக் ஸ்டண்ட் செய்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வகையில், ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வாலிபர் ஒருவர் மிகவும் அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அவர் செய்த ஸ்டண்ட்டின் பெயர் வீலி. இது மிகவும் அபாயகரமானது.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாத அந்த வாலிபர், பொது சாலையில் இந்த ஸ்டண்ட்டை செய்தார். போதாக்குறைக்கு ஹெல்மெட் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு கவசங்களையும் அவர் அணியவில்லை. அத்துடன் இளம்பெண் ஒருவரும் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவரும் பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அணியவில்லை. ஸ்டண்ட் செய்த வாலிபரின் ஒரு காலை அவர் இறுக பற்றியிருந்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகே உள்ள தேவனஹள்ளி-நந்தி ஹில் சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.

சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பெங்களூர் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், பெங்களூர் எலகங்கா பகுதியை சேர்ந்த நூர் அகமது என்ற வாலிபர்தான் இந்த அபாயகரமான ஸ்டண்ட்டை செய்திருந்தது தெரியவந்தது.

இதர இளைஞர்களுக்கும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியதால், போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள நூர் அகமது, அங்குள்ள அரசு கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நூர் அகமதுவின் தந்தை ஆட்டோ டிரைவராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால், நூர் அகமதுவால் சொந்தமாக டூவீலர் வாங்க முடியவில்லை. நண்பர்களின் டூவீலர்களில்தான் ஸ்டண்ட் செய்ய கற்று கொண்டுள்ளார்.

பைக் ஸ்டண்ட் தொடர்பாக நண்பர்களுடன் சேர்ந்து நூர் அகமது அடிக்கடி பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் வீலி, ஸ்டாப்பி உள்பட பல்வேறு ஸ்டண்ட்களை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர்.

அதே சமயம் நூர் அகமது ஸ்டண்ட் செய்த நேரத்தில் பின்னால் அமர்ந்திருந்த பெண் யார்? என்ற கேள்வி போலீசார் மனதில் எழுந்தது. ஆனால் அந்த பெண் யார்? என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என போலீசாரிடம், நூர் அகமது கூறியுள்ளார்.

இரு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்வதில் நூர் அகமதுவிற்கு உள்ள திறன்களை பார்த்து வியந்த அந்த பெண், தானாக முன்வந்து இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடம் நூர் அகமது இவ்வாறுதான் கூறியுள்ளார்.

வீடியோவில் இருந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் பதிவு எண் மூலமாகதான் போலீசார் நூர் அகமதுவை பிடித்துள்ளனர். பதிவு எண்ணை வைத்து, முதலில் ஸ்கூட்டரின் உரிமையாளரை பிடித்துள்ளனர். அதன் பின் நூர் அகமது சிக்கியுள்ளார்.

பொது சாலையில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்டை நூர் அகமது செய்தது தொடர்பாக டிவி9 கன்னடா செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதேபோன்றதொரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கூட நடைபெற்றது. அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல், பொது சாலையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








