போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...
ஜவுளிக்கடை பொம்மைகள் போலீஸாக மாறியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.

இதுதவிர வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வைக்க காவல் துறையினரும் தங்கள் பங்கிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழலில் கர்நாடக மாநிலம் பெங்களூர் காவல் துறையினர் எடுத்துள்ள ஒரு வித்தியாசமான நடவடிக்கை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெங்களூர் நகரின் முக்கியமான ஒரு சில இடங்களில் போலீசார் தற்போது பொம்மைகளை நிறுவியுள்ளனர். அவற்றுக்கு போக்குவரத்து போலீசார் போன்று உடை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் நிற்கிறார்கள் என பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.

உண்மையில் இவ்வாறான ஒரு பழக்கம் வாகன ஓட்டிகளிடம் இருக்கவே செய்கிறது. அதாவது போலீசார் நிற்பதை பார்த்த பிறகுதான் பலர் அவசர அவசரமாக ஹெல்மெட்டை அணிவார்கள். அதேபோல் பலர் சீட் பெல்ட்டை அணிவதும் கூட போலீசாரை பார்த்த பிறகுதான். செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் கூட போலீசாரை பார்த்தால், உடனடியாக செல்போனை வைத்து விடுவார்கள்.

எனவேதான் இவ்வாறான ஒரு அதிரடி யோசனை பெங்களூர் போலீசாருக்கு உதித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அரை டஜன் ஜங்ஷன்களில் இந்த பொம்மைகளை போலீசார் நிறுவியுள்ளனர். இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், மேலும் 174 பொம்மைகளை முக்கியமான இடங்களில் நிறுவ பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு காவல் துறைக்குள்ளேயே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பான பிரச்னைக்கு இது நீண்ட கால தீர்வு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இது தேவையில்லாத செலவு என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூர் போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பயன் அளிக்குமா? அல்லது இது தேவையற்ற திட்டமா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








