அதிகரித்து வரும் காற்று மாசு: கர்நாடக முதலமைச்சரின் அதிரடி முடிவு!
கர்நாடகவில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் குறைக்கும் விதமாகவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால், சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப நோய் தொற்றையும் பரப்பி வருகின்றது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை சுவாசிப்பதன் மூலம், நுரையீரலில் தொற்று ஏற்படுகிறது. இதைத்தவிர்த்து, தோல் அரிப்பு, தலைமுடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளையும், பின்விளைவுகளையும் அது உருவாக்குகின்றது.

இத்தகைய சூழலை தவிர்க்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சமீபகாலமாக ஜீரோ எமிஸ்ஸன் வாகனப் பயன்பாட்டை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக சில நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

மக்களிடம் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரி வாகனங்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டில் மின் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பேட்டரியால் இயங்கும் கார் மற்றும் பைக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மாநிலத்தில் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெஸ்காம் நிறுவனம் பெங்களூருவில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கியமான இடங்களில் இ-சார்ஜ் நிலையங்களை அமைக்க உள்ளது. ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் அமைக்கப்படும் அந்த நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்களுக்கு முன்னோடியாக, மின்வாகனங்களின் பயன்பாட்டை அரசு தொடங்க உள்ளது. அதன்படி, மக்களின் பயன்பாட்டுக்காக இயங்கி வரும் பொது போக்குவரத்துறைக்காக 3 ஆயிரம் பேட்டரி பஸ்கள் வாங்க உள்ளது. கர்நாடகவில் பேட்டரி பஸ்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அடுத்த மூன்றாண்டுகளில் மக்களுக்காக இயங்கும் வாகன போக்குவரத்தில் அதிகமாக பேட்டரி பஸ்களே இயக்கப்படும் என கூறப்படுகிறது.

மின்வாகன பயன்பாட்டில் முன்னோடியாக கர்நாடக அரசு செயல்படுவது சுற்றுச்சூழலியாளர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் விதமாக மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications