தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து பெங்களூரை காப்பாற்றிய டிராஃபிக் ஜாம்!
தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பெங்களூரை காப்பாற்றிய போக்குவரத்து நெரிசல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே படிக்கலாம்.
பெங்களூர் மாநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரபலமான விஷயம். போக்குவரத்து நெரிசலால் பலரின் அவசர வேலைகள், தினசரி நடைமுறை வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் விரயம், பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலால் பெங்களூருக்கு ஒரு பெரிய நல்ல காரியம் நடந்துள்ளது.

ஆம், பெங்களூரில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அந்த தாக்குதல் திட்டம் முழு வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டை குறிவைத்து லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த டெல்லி ஐஐடி பேராசிரியர் எம்.சி.பூரி பலியானார். 5 பேர் காயமடைந்தனர். ஆனால், தீவிரவாதிகள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்த முடியாமல் போனது. அந்த தாக்குதல் முழுமை பெறவில்லை.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதல் தோல்வி அடைந்ததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. போக்குவரத்து நெரிசலால்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்ததுள்ளது. முதலில் லீ மெரிடியன் ஓட்டலில் தாக்குதல் நடத்த லஸ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், அங்கு உள்ளே செல்வதற்கான கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால், அவர்களது திட்டம் பலிக்கவில்லை. இதையடுத்து, தங்களது தாக்குதல் இலக்கை பிஇஎஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மீது திருப்பி உள்ளனர். ஆனால், அங்கு தாக்குதல் நடத்தியவுடன் தப்பிப்பதற்கான வழி இல்லை என்று தெரிந்தவுடன் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இதையடுத்து, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் சென்றுள்ளனர். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவர்கள் குறித்து வைத்திருந்த நேரத்தில் தாக்குதல் நடத்த முடியாமல் போய்விட்டது.

மேலும், தீவிரவாதி ஒருவன் எடுத்து வந்த ஏகே-47 ரக எந்திர துப்பாக்கியும் செயலிழந்துவிட்டதாம். இதையடுத்து, கையெறி குண்டுகளை வீசி அறைகுறையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஹபீப் மியா என்பவரை திரிபுராவில் கைது செய்த போலீசார் கடந்த வாரம் பெங்களூர் அழைத்து வந்தனர். இந்திய அறிவியல் கழகத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வங்கதேசம் தப்பிச் செல்ல உதவியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் நடத்தப்பட்ட தாக்குதல் போக்குவரத்து நெரிசல் காரணமாக தோல்வி கண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெங்களூர் போக்குவரத்து நெரிசல் குறித்து தினசரி நாம் புலம்பி வரும் நிலையில், அது ஒரு நல்ல காரியத்தையும் செய்துள்ளது ஆறுதலான விஷயம்தான். கடந்த 2015ம் ஆண்டு புள்ளிவிபரப்படி, உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் பட்டியலில் பெங்களூர் 19வது இடத்தில் உள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களை காட்டிலும் பெங்களூரில் வாகனப் பெருக்கத்தின் அளவு மிக அதிகமானதே, கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. அத்துடன், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், புறநகர் ரயில் சேவை இணைப்பு இல்லாததும் முக்கிய காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








