ஓரங்கட்டப்படும் கேப்கள்... மீண்டும் ஆட்டோக்களில் பயணம் செய்ய ஆசைப்படும் மக்கள்... ஏன் தெரியுமா?
கேப்களை காட்டிலும் ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ மற்றும் கேப்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக சொந்த கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக கார், டூவீலர்களின் விற்பனை உயரும் என ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன.

தற்போதே அதனை உணர முடிகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே கார்களை வாங்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியால், புதிய கார்களுக்கு பதில் பயன்படுத்தப்பட்ட கார்களை அவர்கள் வாங்குகின்றனர்.

மறுபக்கம் ஆட்டோ, கேப்களை ஓட்டி வருபவர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. அவர்களுக்கு போதிய அளவில் சவாரி கிடைப்பதில்லை. இதனால் ஆட்டோ மற்றும் கேப் ஓட்டுனர்கள் ஏராளமானோர் தற்போது வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். ஆனால் பெங்களூரில், கேப் ஓட்டுனர்களை விட ஆட்டோ ஓட்டுனர்களின் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்ற சூழல் காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பாக, செல்போன் செயலி சார்ந்து இயங்கும் கேப்களிடம், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்து வந்தனர். அதாவது ஆட்டோக்களை விட கேப்களில் பயணம் செய்வதற்கே வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் கொரோனா அச்சத்தால் மக்கள் தற்போது மீண்டும் ஆட்டோக்களுக்கே திரும்பி வருகின்றனர்.

அதாவது கேப் அல்லது ஆட்டோ ஆகிய இரண்டில் எது பாதுகாப்பானது? என்றால், பெங்களூர் நகரை சேர்ந்த பலரின் பதில் ஆட்டோ என்பதாகதான் உள்ளது. ஒப்பீட்டளவில் கேப்களை விட ஆட்டோக்கள் நன்கு காற்றோட்டமாக உள்ளன என்பது உள்பட இதற்கு பெங்களூர் நகரில் வசிக்கும் மக்கள் பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கோரமங்களா பகுதியை சேர்ந்த ஸ்வாதி என்பவர் கூறுகையில், ''முன்பெல்லாம் கேப்களில், 'ஷேர் ரைடு' மூலம் பயணம் செய்வேன். ஆனால் தற்போது ஆட்டோக்களைதான் பாதுகாப்பானது என நான் நினைக்கிறேன். ஆட்டோக்களின் இரு புறமும் நல்ல காற்றோட்டம் உள்ளது. ஆனால் மீட்டர் அடிப்படையில் இயங்கும் ஆட்டோக்களை கண்டுபிடிப்பதுதான் சவாலாக உள்ளது'' என்றார்.

சிவி ராமன் நகரில் வசிக்கும் அனிதா கிருஷ்ணன் என்பவரும் கிட்டத்தட்ட இதே கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஒப்பீட்டளவில் ஆட்டோக்கள்தான் பாதுகாப்பானவை என நான் நினைக்கிறேன். ஏனெனில் உள்ளே ஏறுவதற்கு கதவு உள்ளிட்டவைகளை நாம் தொட வேண்டிய அவசியமில்லை'' என்றார்.

வருமானத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், ஆட்டோக்கள்தான் குறைவான செலவில் கிடைக்க கூடிய போக்குவரத்து முறை என முருகேஷ்பாளையா பகுதியை சேர்ந்த ஸ்னேகா என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சமீபத்தில் சம்பள குறைப்பு பிரச்னையால் நான் பாதிக்கப்பட்டேன். இதனால் போக்குவரத்திற்காக ஆகும் செலவை கட்டுப்படுத்த முடிவு செய்தேன்.

என்னை பொறுத்தவரை கேப்களை விட ஆட்டோக்களில் குறைவான செலவில் பயணம் செய்ய முடிகிறது'' என்றார். ஆட்டோக்களுக்கு தேவை அதிகரித்து வருவதாக ஓலா நிறுவனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஓலா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''பெரிய மற்றும் சிறிய நகரங்களில், குறுகிய பயணங்களுக்கு ஆட்டோக்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக நகரங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், சேவை கிடைக்கக்கூடிய 120க்கும் மேற்பட்ட நகரங்களில், ஆட்டோக்களுக்கு தேவை அதிகரித்து வருவதை காண்கிறோம். குறிப்பாக ஆட்டோக்களுக்கான தேவை அடிப்படையில் பெங்களூர் நகரம், முதல் மூன்று சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது.

அங்கு ஆட்டோக்களுக்கான தேவை வாரத்திற்கு வாரம் அதிகரித்து கொண்டே செல்கிறது'' என்றனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த ராகவேந்திரா என்பவர் கூறுகையில், ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் தற்போது பாதுகாப்பு திரைகளை பொருத்தியுள்ளனர்.

அத்துடன் ஒவ்வொரு பயணம் முடிந்த பிறகும், பயணிகள் அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளை கிருமி நீக்கம் செய்கின்றனர். ஆட்டோக்கள் பாதுகாப்பானவை. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு இருந்த அளவிற்கு இன்னும் தேவை வரவில்லை'' என்றார். இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








