உயிரை எடுக்கும் கொரோனா வைரஸ்... இந்த ஒரு வீடியோவ பாத்தா இனி வீட்டை விட்டு வெளிய வரவே மாட்டீங்க...
கொரோனா வைரஸ் எவ்வளவு கொடூரமானது? என்பதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனாவில் தற்போது நிலைமை மெல்ல மெல்ல மேம்பட்டு வரும் நிலையில், சீனாவிற்கு வெளியே நிலைமை படுமோசமாகி கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 43,272 பேரின் உயிரை இந்த கொடூர வைரஸ் பறித்துள்ளது. மேலும் 8,72,921 பேரை தாக்கியுள்ளது. எனவே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளை, மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை ஒரு தரப்பினர் முறையாக கடைபிடித்தாலும், நிலைமையின் விபரீதம் புரியாமல் ஒரு சிலர் இதனை விடுமுறையாக கருதி ஊர் சுற்றி வருகின்றனர். பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடங்கி சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், வாகனங்களில் ஒரு சிலர் ஜாலி ரைடு சென்று கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இளைஞர்கள் அதிகளவில் ஊர் சுற்றுவதை பார்க்க முடிகிறது. எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை அடக்குவதற்காக, போலீசார் ஆரம்பத்தில் லத்தியால் தாக்கினர். வாகன ஓட்டிகளை காவல் துறையினர் தாக்கும் வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அவசியம் இல்லாமல் ஊர் சுற்றுபவர்களுடன் சேர்த்து, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்களும் தாக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே வாகன ஓட்டிகளை தாக்குவதை காவல் துறை குறைத்து கொண்டது. ஆனால் அதற்கு பதிலாக புது ட்ரீட்மெண்ட்டை போலீசார் தற்போது கையில் எடுத்துள்ளனர்.

இதன்படி தேவை இல்லாமல் ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அபராதமும் விதிக்கப்படுகிறது. அத்துடன் வழக்கு பதிவும் செய்யப்படுகிறது. சட்ட ரீதியில் இத்தகைய நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருவதோடு, சில வித்தியாசமான தண்டனைகளையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

தோப்பு கரணம் போட சொல்வது, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வை நடத்துவது என காவல் துறை தற்போது வேற லெவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் போலீசாரின் இத்தகைய வித்தியாசமான நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் போலீசாரும் வித்தியாசமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும்? என்பதை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் அதே சமயத்தில் மரண பயத்தையும் காட்டுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோதான் தற்போது சமூக வலை தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் போலீசார் சிலர் கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட்டை அணிந்தபடி நிற்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் அந்த வழியாக பைக்கில் வருகிறார். அவரை ஓடி சென்று பிடித்த போலீசார், கொரோனா வைரஸ் ஹெல்மெட்டை அவருக்கு அணிவித்து விடுகின்றனர். அத்துடன் கொரோனா ஹெல்மெட்டை அணிந்திருந்த ஒரு போலீஸ்காரர் அவரது பைக்கில் ஏறி கொள்கிறார்.

இறுதியில் மற்ற போலீஸ்காரர்கள் சிலர் மணி அடிப்பதுடன், சங்கு ஊதவும் செய்கின்றனர். வீடுகளை விட்டு வெளியில் வந்தால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் நிகழலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே போலீசார், இப்படி நடித்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர மாட்டார்கள் என காவல் துறையினர் நம்புகின்றனர். வாகன ஓட்டிகள் பலர் வெளியே சுற்றி வருவதால், இத்தகைய விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் அவர்களை கட்டுப்படுத்துவதும் போலீசாரின் நோக்கமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








