பார்க் செய்ய முடியாமல் திணறும் காவல்துறை! பறிமுதல் செய்த 10,000 வாகனங்களை என்ன செய்ய போறாங்க தெரியுமா?..
பறிமுதல் செய்யும் வாகனங்களை பார்க் செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் ஓர் அதிரடி முடிவையும் அவர்கள் எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு விதிகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் அலை பரவலின் இருந்தபோதைக் காட்டிலும் பல மடங்கு தெளிவுத் தன்மையுடன் அரசுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் பொருட்டு வீட்டுக்கே நடமாடும் காய்கறி கடைகளை அனுப்பி வைத்தல், கடும் கட்டுப்பாடுகளை விதிகளை நடைமுறைப்படுத்துதல் என அதிரடி நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன. இருப்பினும், மக்கள் ஆங்காங்கே நடமாடிய வண்ணமே இருக்கின்றனர்.

குறிப்பாக, வாகனங்களில் வெளியில் சுற்றி திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. அவ்வாறு வெளியில் வருபவர்கள் உரிய (அத்தியாவசிய) காரணத்திற்காக வருபவர்களாக இருந்தால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவர்களை விட்டுவிடுகின்றது, காவல்துறை.

அதேசமயம், தேவையில்லாமல் அவர்கள் வெளியில் வந்தது தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தயங்குவதில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாள்தோறும் வாகனம் பறிமுதல் மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நாட்டில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில், மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளினால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களைப் பறிமுதல் செய்திருப்பதாக பெங்களூரு நகர காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இவையனைத்தும் வெறும் பத்தே நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டுவரப்பட்ட முதல் நாளிலேயே 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை பெங்களூரு நகர காவல்துறை பறிமுதல் செய்து அதிரடி காட்டியது. மிக சமீபத்தில்கூட ஒரே நேரத்தில் விலையுயர்ந்த பென்ஸ் கார்களை பெங்களூரு போலீஸார் பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையிலேயே, நாள் ஒன்றிற்கு ஆயிரம் வாகனங்கள் என்ற வீதத்தில் 10 நாட்களுக்குள் 10 ஆயிரம் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால், தற்போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பார்க் செய்வதற்கு போதிய இடவசதி இல்லாமல் காவல்துறை திணற ஆரம்பித்திருக்கின்றது.

நகரத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் வாகனங்கள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளன. ஆகையால், காவல்நிலையங்களுக்கு அருகில் இருக்கும் காலியிடங்களில் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி வருகின்றனர். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமையாளர்களிடத்திலேயே ஒப்படைக்க காவல்துறை தற்போது திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான வாகனங்கள்மீது தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய வாகனங்களையே மீண்டும் அதன் உரிமையாளர்களிடத்தில் ஒப்படைக்க காவல்துறை திட்டமிட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டும் இதேபோன்று பொதுமுடக்க விதிகளை மீறியதாகக் கூறி பெங்களூரு நகர போலீஸார் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அந்தவாகனங்களை மாநிலத்தின் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மீண்டும் அதன் உரிமையாளர்களிடத்திலேயே ஒப்படைக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 500 அபராதம் என்றும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1,000 அபராதம் வசூலிக்கப்பட்டு பின்னர் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதேபோன்று, தற்போது ஒப்படைக்கப்பட இருக்கும் வாகனங்களிடத்தில் இருந்து உச்சபட்ச அபராதம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: முதல் 2 படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








