ரிலாக்ஸ் வேணும்ங்க... மன அழுத்தத்தில் இருந்து விடுபட பைக் ரைடு... கொத்தாக தூக்கி செக் வைத்த போலீஸ்
ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், பைக் ரைடு சென்றவர்களுக்கு போலீசார் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வது என்பது பைக் காதலர்களுக்கு மன நிறைவை தரும் அம்சங்களில் ஒன்று. மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் அவர்களுக்கு பைக் பயணங்கள் உதவி செய்கின்றன. உடைமைகளை பின்னால் கட்டி கொண்டு பைக்குகளில் லாங் டிரிப் அடிப்பவர்களை நெடுஞ்சாலைகளில் நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்.

குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு 'பைக்கிங்' என்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு. இந்தியாவில் லாக்டவுன் அமலுக்கு வருவதற்கு முன்னதாக, வார விடுமுறை நாட்களில், பெங்களூரை சேர்ந்த பலர் பைக் பயணங்களை மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன், நிலைமை தலைகீழாக மாற்றி விட்டது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்தாகி விட்டன. அத்துடன் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த எச்சரிக்கையை மீறி, அத்தியாவசியம் இல்லாமல் இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். எனினும் தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின் ஆட்டோ, டாக்ஸிகளுக்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கார், பைக் போன்ற தனியார் வாகனங்களை தேவையில்லாமல் இயக்குபவர்கள் மீது முன்பு போல நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது. இதை உறுதி செய்யும் வகையிலான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

நாம் ஏற்கனவே கூறியபடி, பைக் பயணத்தில் ஆர்வம் காட்ட கூடியவர்களை அதிகளவு கொண்ட நகரங்களில் பெங்களூரும் ஒன்று. தற்போது ஊரடங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீண்டும் பைக் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருப்பது நல்லது.

ஏனெனில் பெங்களூர்-ஹசன் நெடுஞ்சாலையில் உள்ள சோலூர் அருகே நேற்று முன் தினம் (சனிக்கிழமை), 61 பைக் ரைடர்களை போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூரில் இருந்து வந்தவர்கள் ஆவர். ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது காவல் துறையினர் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினரால் பிடிக்கப்பட்ட பைக் ரைடர்கள் அனைவரும் சோலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அபராதம் செலுத்திய பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து சோலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் கூறுகையில், ''லாக்டவுன் நேரத்தில், அத்தியாவசிய பணிகளுக்கான பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனினும் ஒரு சிலர் பைக் ரைடில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் அதிக வேகத்தில் பறப்பதாகவும் எங்களுக்கு புகார்கள் வந்தன. இதன் காரணமாகவே நாங்கள் பைக்குகளை பறிமுதல் செய்ய முடிவெடுத்தோம்'' என்றனர். ஆனால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என மோட்டார்சைக்கிள் ரைடர்கள் புலம்புகின்றனர்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத பைக் ரைடர் ஒருவர் கூறுகையில், ''லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்றுகிறோம். இப்படி நீண்ட தூர பைக் பயணங்களை மேற்கொள்வதன் மூலம், எங்களால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடிகிறது'' என்றார். இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் என்னதான் கவனமாக இருந்தாலும் கூட, அவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பதுதான் தற்போது நல்ல வழி. இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே பைக்கிங்கை மீண்டும் தொடங்க இது சரியான நேரம் போல் தெரியவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறையும் வரை, பைக் ரைடர்கள் கொஞ்சம் காத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








