செக்மேட்... இனி போலீஸ் இல்லேனு யாரும் ரூல்ஸை மீற முடியாது... அதிநவீன தொழில்நுட்பத்தை களமிறக்க போறாங்க!
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து, தண்டனை வழங்கும் பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பணிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வெகு விரைவில் 250 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இவை அதிக 'க்ளாரிட்டி'-யில் காட்சிகளை பதிவு செய்யும். மொத்தம் 50 இடங்களில் இந்த கேமராக்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கேமராக்களின் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, தண்டனை வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதில் இந்த கேமராக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image used for representation purpose only
அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் இந்த கேமராக்கள் உதவி செய்யலாம். ஐடிஎம்எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் (ITMS - Intelligent Transport Management System) ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை நிகழ் நேரத்தில் டிராக் செய்ய முடியும். அத்துடன் சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டிய தேவையையும் இது குறைக்கும்.
அதாவது கேமராக்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால், போக்குவரத்து காவலர்கள் களத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்காது. சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது, அதனை மீறி சென்றால், இந்த அதிநவீன தொழில்நுட்பம் கண்டறிந்து விடும். அதேபோல் அதிவேகத்தில் சென்றாலும், வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசினாலும், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றாலும், கண்டுபிடித்து விடக்கூடிய திறனை இந்த அதிநவீன தொழில்நுட்பம் பெற்றுள்ளது.
அத்துடன் சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் லேன் விதிமுறைகளை மீறுபவர்களையும் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடித்து விடும். இந்த தொழில்நுட்பம், போக்குவரத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கும். யாராவது விதிமுறைகளை மீறுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் அபராத ரசீதை அனுப்பி விடும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை திருத்துவது மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவை மட்டுமே இந்த திட்டத்தின் தலையாய நோக்கம் என பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும், சட்டப்படி தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூர், போக்குவரத்து நெரிசல்களுக்கு பெயர் பெற்றது. இதன் காரணமாக பெங்களூர் நகரை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். அதேபோல் பெங்களூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுக்களை சமூக வலை தளங்களில் அவ்வப்போது காணப்படுகிறது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் வெகு விரைவில் அமலுக்கு வருகிறது.
எப்படியோ போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சிதான். பெங்களூர் மட்டுமல்லாது, மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் நல்லது. போக்குவரத்து காவலர்கள் இல்லையே என அலட்சியமாக இருக்க வேண்டாம். அவர்கள் இல்லாவிட்டாலும், கேமராக்கள் கண்காணித்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விட கூடாது. தற்போது தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்டது என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications