கார் வாங்க வரியை குறைச்சுட்டாங்க! ஆனா இனி கார்ல போனா வரி கட்டணும்! மக்களின் தலையில் இடியை இறக்கும் அரசு!
இந்தியாவின் ஐடி கேபிடலான பெங்களூர் (Bangalore), தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் பூங்காங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூர் நகருக்கு இடம்பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே பெங்களூர் நகரின் மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப பெங்களூர் நகரில் சாலை வசதிகள் இல்லை. இதன் காரணமாக பெங்களூர் நகரம் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) பிரச்னையில் சிக்கி திணறி வருகிறது.

பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். குறுகலான, அதே நேரத்தில் மோசமான நிலையில் உள்ள சாலைகள், நகரின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் மற்றும் இதர கட்டுமான பணிகள் போன்றவை எல்லாம், பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும்.
இந்த வரிசையில், தனி நபர்கள் தங்கள் பயணத்திற்கு கார்களை பயன்படுத்துவதையும், பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு காரணம்தான். அதாவது 5 பேர் அல்லது 7 பேர் பயணம் செய்ய கூடிய காரில், ஒரு நபர் மட்டும் தனியாக பயணம் செய்வதை, பெங்களூர் நகரில் நீங்கள் காண முடியும். இது சாலையில் மிக கடுமையான நெரிசலை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே காரில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு 'செக்' வைக்க, கர்நாடக மாநில அரசு அதிரடியாக திட்டமிட்டுள்ளது. பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கர்நாடக மாநில அரசு, சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யூலு (Yulu) நிறுவனத்தின் இணை நிறுவனரான ஆர்.கே. மிஷ்ரா (R.K. Mishra) கூறுகையில், நெரிசல் வரி (Congestion Tax) விதிப்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். இதன்படி அவுட்டர் ரிங் ரோடில், காரில் ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்'' என்றார்.
அவுட்டர் ரிங் ரோடு மட்டுமல்லாது, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பெங்களூர் நகரின் பல்வேறு சாலைகளிலும், நெரிசல் வரியை அமலுக்கு கொண்டு வருவது குறித்து, கர்நாடக மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது. கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், காரில் தனியாக ஒருவர் மட்டும் பயணம் செய்வது குறையும் என கர்நாடக மாநில அரசு கருதுகிறது.
இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதும் கர்நாடக மாநில அரசின் நம்பிக்கை. இது குறித்து தி பிரிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த வரி எப்போது அமலுக்கு வரும்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே போல் இந்த வரி, காரில் ஒருவர் மட்டும் தனியாக பயணிக்க கூடியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் பொது போக்குவரத்தை மேம்படுத்திய பிறகு மட்டுமே, இது போன்ற திட்டங்களை எல்லாம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், பெங்களூரில் பொது போக்குவரத்து மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது.
பெரும்பாலும் பஸ் மற்றும் மெட்ரோ போன்ற வாகனங்களைதான் மக்கள் சார்ந்து உள்ளனர். ஆனால் பஸ்களில் தற்போதே கூட்ட நெரிசல் பிரச்னை மிக கடுமையாக உள்ளது. அதேபோல் பல்வேறு இடங்களில் மெட்ரோ வசதி இல்லை. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் தற்போதுதான் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொது போக்குவரத்து சௌகரியமாக இல்லாத காரணத்தால்தான், பலரும் தனியாக கார்களில் பயணம் செய்கின்றனர். எனவே கர்நாடக மாநில அரசு நெரிசல் வரியை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக இதை தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும். போதுமான அளவிற்கு பொது போக்குவரத்து இல்லாத சூழலில், பொதுமக்கள் கார்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால், அரசு அதிருப்தியை சம்பாதிக்க நேரிடலாம்.
அதற்கு ஏற்ற வகையில் சமூக வலை தளங்களில் தற்போதே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கார் வாங்குவதற்கான ஜிஎஸ்டி (GST) வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இனி காரில் சென்றால், நெரிசல் வரி என்ற பெயரில் புதிதாக வரி கட்ட வேண்டுமா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








