அபராதம் போட்றதுல்லாம் அந்த காலம்! இனி விதிமுறையை மீறினால் வேலையே போயிரும்! சாட்டையை சுழற்றும் போலீஸ்!
இந்திய சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மிகவும் கடுமையான நடவடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகின்றனர். ஆனால் இன்னமும் போக்குவரத்து விதிமுறை மீறல்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
எனவே பெங்களூர் நகரில் புதுமையான திட்டம் ஒன்றை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தற்போது முன்னெடுத்துள்ளனர். இதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை பற்றிய விபரங்கள், அவர்கள் வேலை செய்து வரும் அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 20 நாட்களாக இந்த திட்டத்தை பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.
இந்த திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் அடையாள அட்டையை பரிசோதிக்கிறோம். இதன் பின் அவர்கள் என்னென்ன விதிமுறைகளை எல்லாம் மீறினார்கள்? என்ற விபரத்தை, அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அனுப்புகிறோம். இது தவிர அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்.

நாங்கள் ஊழியர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதையும் அனுப்புவதில்லை. மாறாக அவர்கள் செய்த போக்குவரத்து விதிமுறை மீறல்கள் பற்றிய தகவல்களை மட்டுமே அனுப்புகிறோம். அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். வேறு எதுவும் இல்லை'' என்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு ஏற்படும் உலக புகழ் பெற்ற போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் கூட, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
எனவே அங்கு இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த தருணத்தில், அனைத்து நிறுவனங்களும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை தங்கள் ஊழியர்களுக்கு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்கள் போன்ற அபாயங்களில் இருந்தும் அவர்களை பாதுகாக்கும்.
இது போன்ற மிகவும் வித்தியாசமான நடவடிக்கைகள் வரும் காலங்களில் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கும் இந்த நடவடிக்கையை ஒரு சிலர் எதிர்த்து வருகின்றனர் என்பதையும் இந்த நேரத்தில் நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








