ஒயின்ஷாப் பார்களுக்கு அதிரடி உத்தரவு... குடிகாரர்களுக்கு இப்படி ஒரு வசதியா! இந்த சட்டத்தை யாருமே எதிர்பாக்கல!
மிகவும் வித்தியாசமான சட்டம் ஒன்றை அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. பார்களில் மது அருந்தி விட்டு, அந்த போதையிலேயே பலர் வாகனங்களை இயக்குகின்றனர். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். வாகனத்தை இயக்குபவருக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் இதனால் பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே மது அருந்தினால், பேருந்துகளிலோ அல்லது ஆட்டோ, கார் போன்றவற்றை வாடகைக்கு எடுத்து கொண்டே வீட்டிற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதனை பின்பற்றவும் பலர் மறுக்கின்றனர். எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

இதையெல்லாம் பரிசீலனை செய்த அரசாங்கம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான இந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, குடிபோதையில் இருப்பவர்கள் வீடு திரும்புவதற்கு பார் உரிமையாளர்களே வாகன வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மது அருந்திய வாடிக்கையாளர்கள் சுற்றுலா பயணியாக இருந்தால், அவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவதற்கு பார் உரிமையாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த புதிய விதிமுறை கூறுகிறது.

அதே சமயம் மது அருந்திய வாடிக்கையாளர் உள்ளூர் நபராக இருந்தால், அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதற்கு பார் உரிமையாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்ல கூடிய கோவா மாநிலத்தில்தான் இந்த புதிய விதிமுறை வெகு விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

கோவா போக்குவரத்து துறை அமைச்சர் மௌவின் கோடின்ஹோதான் (Mauvin Godinho) தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''வாடிக்கையாளர்கள் குடித்திருக்கும் சமயங்களில், அவர்களை அவர்களது சொந்த வாகனங்களில் வீடு திரும்புவதற்கு பார் உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது.

அதற்கு பதிலாக அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு வேறு வாகனங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் (கேப் போன்ற வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்). வாடிக்கையாளர்கள் மறுநாள் வந்து தங்கள் வாகனங்களை எடுத்து கொள்ளலாம். குடிபோதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை டாக்ஸியில் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைப்பது பார் உரிமையாளர்களின் பொறுப்பு.

மக்களின் பாதுகாப்பிற்காகவே கோவாவில் இந்த விதிமுறையை கொண்டு வரவுள்ளோம். இந்த விதிமுறை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். வெளிநாடுகளை போலவே, இங்கும் மக்கள் அனைவரும் விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதென்பது மிகவும் தவறானது.

குறிப்பாக குடிபோதை காரணமாக நடைபெறும் சாலை விபத்துக்கள் எனக்கு கவலையளிக்கிறது. கோவா மருத்துவ கல்லூரிக்கு வரும் கேஸ்களில் 20 சதவீதம் விபத்துக்கள்தான். நீங்கள் சாலையில் வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்க கூடியவராக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் குடிபோதையில் ஒருவர் திடீரென உங்கள் மீது வந்து மோத கூடும்.

இதுபோன்ற விபரீதங்கள் நடைபெற கூடாது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் இரக்கம் காட்ட கூடாது என அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்றார். கோவா என்றாலே மதுபான பார்ட்டிகள்தான் நம் அனைவரின் மனதிலும் முதலில் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு கோவா பார்ட்டிகளுக்கு பெயர் பெற்றது.

இதன் காரணமாக கோவாவில் சாலை விபத்துக்களும் அதிகளவில் நடைபெறுகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வித்தியாசமான ஒரு விதிமுறையை கோவா மாநில அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. கோவா அரசின் இந்த புதிய திட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








