அம்மா ஸ்கூட்டர் திட்டம் திடீர் ரத்து? தேர்வான பெண்களுக்கு மானியம் வழங்காததின் பரபரப்பு பின்னணி...
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, மானியம் இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, அரசு மானியம் இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் அம்மா ஸ்கூட்டர் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்ற அச்சம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலை, பெண்களுக்கு மானியம் வழங்காதது ஏன்? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

தமிழக அரசின் சார்பில், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்.

வேலைக்கு செல்லும் மற்றும் சுய தொழில் புரியும் பெண்களுக்கு, இத்திட்டத்தின்கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது இரு சக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவான தொகையோ, அந்த பணம் மானியமாக வழங்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று. இதனால் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்குவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி நடப்பாண்டில் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற தகுதி உடைய பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தேர்வான பயனாளிகள் பலருக்கும், இன்னும் மானிய தொகை கிடைக்கவில்லை. இதனால் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதா? என்ற அச்சம் அவர்களுக்குள் எழுந்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளான பெண் ஒருவர் கூறுகையில், ''ஒரு பகுதி பணத்தை செலுத்தி இரு சக்கர வாகனத்தை வாங்கி விட்டேன். ஆனால் எஞ்சிய 25 ஆயிரம் ரூபாயை கேட்டு, இரு சக்கர வாகன டீலர் துளைத்தெடுக்கிறார். எனவே டீலருக்கு எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக, மானியத்தை எதிர்நோக்கியுள்ளேன்'' என்றார்.

பலருக்கும் மானியம் கிடைக்காதது குறித்து டிஎன்சிடிடபிள்யூ ( TamilNadu Corporation for Development of Women) அதிகாரிகள் கூறுகையில், ''2017-18ம் ஆண்டில், ஒரு லட்சம் பெண்களுக்கு மானியம் வழங்க வேண்டும். இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு விட்டது'' என்றனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''எஞ்சிய அனைவருக்கும் இன்னும் 2 மாதங்களில் மானிய தொகை வழங்கப்படும். இந்த பணிகள் முடிந்த பின்பு, 2018-19ம் ஆண்டில் மானியம் பெற தகுதி உடைய 1 லட்சம் பெண்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்குவோம். திட்டம் ரத்தாகவில்லை'' என்றனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களில் பாதி பேருக்கு மட்டுமே இதுவரையில் மானியம் வழங்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எஞ்சிய 50 சதவீதம் பேர் இன்னமும் மானியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் 9,500 பெண்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவர்களில் 6,000 பேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3,500 பேருக்கும் இன்னும் 2 மாதங்களில் மானியம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, மானியம் பெறுவதற்கான உத்தரவு பெண்களுக்கு முதலிலேயே வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இவர்களில் சிலரின் பெயர்கள் மாவட்ட கமிட்டி பட்டியலில் விடுபட்டு விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாகவும், ஒரு சிலருக்கு மானிய தொகை இன்னமும் கிடைக்காமல் உள்ளது. எனவே மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு பெண்கள் நடையாய் நடந்து வருகின்றனர்.

சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் கூடிய விரைவில் விடுபட்ட அனைவருக்கும் மானிய தொகை கிடைக்க வேண்டும் என்பதே பெண்கள் உள்பட அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications