ரயிலை விட வேகமாக பயணித்த ஆட்டோ டிரைவர்! பெங்களூரு டிராஃபிக்கில் மின்னல் வேக பயணம்! வைரலாகும் வீடியோ!
பெங்களூருவில் ரயிலை விட வேகமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணித்து சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை தவற விட்ட பயணி ஒருவர் அடுத்த ஸ்டேஷனில் ரயிலை பிடிப்பதற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் மின்னல் வேகத்தில் பயணித்துள்ளார். இதற்காக ரூபாய் 2500 கட்டணமாகவும் வசூலித்துள்ளார். என்ன நடந்தது என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.
எக்ஸ் தள பக்கத்தில் ஆதில் ஹுசைன் என்பவர் தனக்கு பெங்களூருவில் நடந்த ஒரு அனுபவம் குறித்த ட்விட்டர் பதிவையும் அது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது பெங்களூர் மக்களே ஆச்சரியப்படுத்தி உள்ளது. பெங்களூருவில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என பலர் ஆச்சரியமாக இந்த பதிவிற்கு பதில் அளித்து வருகின்றனர். அந்த பதிவில் அவர் அப்படி என்னதான் குறிப்பிட்டுள்ளார் விரிவாக காண்போம்.

பெங்களூரில் இருந்து வெளியூருக்கு செல்ல பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட்டை புக் செய்திருந்தார். அதன்படி பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:40 மணிக்கு இந்த ரயில் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. சரியாக திட்டமிடப்படி ரயிலும் கிளம்பியது. ஆனால் இந்த ரயிலில் டிக்கெட் புக் செய்த ஆதில் ஹூசைன் சரியாக நேரத்திற்கு வரவில்லை. அலுவலக பணி காரணமாகவும் கடுமையான போக்குவரத்து டிராபிக் காரணமாகவும் இவர் கடைசி நேரத்தில் ரயிலை தவற விட்டார்.
இவர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழையும்போது ஏற்கனவே ரயில் கிளம்பி விட்டதாக அறிவிப்பு வந்திருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி யோசிக்கும்போது அங்கிருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் இவரது நிலைமையை புரிந்து கொண்டு இவரிடம் வந்து தான் அந்த ரயிலை பிடிக்க உதவுவதாகவும் அந்த ரயில் அடுத்ததாக எலஹங்கா ரயில் நிலையத்தில் நிற்கும் எனவும் அந்த ரயில் அங்கு செல்வதற்குள் ஆட்டோவில் அழைத்து செல்வதாகவும் கூறினார்.

ஆனால் இதை ஆதில் ஹூசைனால் நம்ப முடியவில்லை. மெஜஸ்டிக் பகுதியில் இருந்து எலஹங்கா பகுதிக்கு செல்ல சுமார் 17 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். மணி ஏற்கனவே 1.50 ஆகிவிட்டது. சரியாக 2:20 மணிக்கு எலஹன்கா ரயில் நிலையத்தில் இந்த ரயில் வந்து நிற்கும்.
சரியாக 30 நிமிடத்தில் எப்படி மெஜஸ்டிகிலிருந்து எலஹங்கா செல்ல முடியும். அதுவும் கடுமையான போக்குவரத்து டிராபிக் இருக்கும் பகுதி வழியாக 30 நிமிடத்தில் 17 கிலோ மீட்டரை கடப்பது முடியாத காரியம் என நினைத்தார். தன்னை அந்த ஆட்டோ டிரைவர் ஏமாற்ற நினைப்பதாக நினைத்தார்.
ஆட்டோ டிரைவர் தான் கட்டாயமாக அவரை அழைத்துச் சென்று விடுவேன் என்றும் அதற்கு கட்டணமாக ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்றும், ரயிலை அவர் பிடிக்க முடிந்தால் மட்டும் இந்த தொகையை அவர் வழங்கினால் போதும் எனவும் ஆட்டோ டிரைவர் பேசினார்.
சரி தானும் இனி ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் விமான டிக்கெட் புக் செய்ய வேண்டும் அதன் விலை ரொம்ப அதிகமாக இருக்கும் ஏற்கனவே ரயிலுக்கு எடுத்த டிக்கெட்டும் வீணாக போய்விடும் என்பதால் ஆட்டோ டிரைவரின் டீலுக்கு ஆதில் ஹூசைன் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து எலஹன்கா நோக்கி வேகமாக பயணிக்க துவங்கினார் . ஆட்டோ டிரைவர் அவருக்கு தெரிந்த குறுக்குப் பாதைகள் வழியாக ஆட்டோவில் பயணித்தார். மிக வேகமாக பயணித்த அவர் ஆதில் ஹுசைன் எதிர்பாராதபடி 2:15 மணிக்கு எலஹன்கா ரயில் நிலையத்திற்கு வந்து விட்டார். உடனடியாக அவர் ஆட்டோ டிரைவருக்கு ரூ2500 ரூபாய் கொடுத்துவிட்டு அடுத்த 5 நிமிடத்தில் பிளாட்பார்மிற்க்கு சென்று அவர் தவறவிட்ட ரயிலை அடுத்த ரயில் நிலையத்தில் பிடித்து விட்டார்.
இந்த சம்பவத்தை ஆதில் ஹுசைன் தனது பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த செயலை செய்த ஆட்டோ டிரைவரை பாராட்டி வருகின்றனர். பலர் இது எப்படி சாத்தியம் என கேட்டு வருகின்றனர். இந்த பையனுக்கு ரூபாய் 2500 கட்டணம் என்பது மிக அதிகமான கட்டணம் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த ஆதில் ஹுசைன் தான் விமானத்தில் பயணித்திருந்தால் இதைவிட மூன்று மடங்கு அதிகம் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் தனது ரயில் டிக்கெட் வீணாக போயிருக்கும். இவருக்கு 2500 ரூபாய் கொடுத்ததன் மூலம் எனது செலவு என்பது குறைவு தான் என பதில் அளித்துள்ளார். பெங்களூர் ஆட்டோ டிரைவரின் இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆதில் ஹூசைன் ஆட்டோவில் வேகமாக பயணித்து ரயிலைப் பிடித்திருந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ வேகமாக பயணிக்கும் போது அவர் விபத்தில் சிக்காமல் தப்பியுள்ளார். இது முற்றிலும் ஆபத்தான பயணம். எல்லா நேரங்களிலும் இது சரியாக நடந்து விடாது. அதனால் இது போன்ற பயணத்தை செய்வதை நாங்கள் என்றும் ஆதரிக்கவில்லை. நீங்கள் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு சென்று விடுங்கள். இதை நம்பி தாமதமாக சென்று உயிரை பணயம் வைக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








