காவிரி நீருக்கு சமரசமே கிடையாது... பெங்களூரில் பந்த்!! விழிபிதுங்கும் கர்நாடக அரசு - என்ன செய்ய போகுதோ!
காவிரி பிரச்சனையால் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நாளை (செப்.26) பெரிய அளவில் பந்த்-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெங்களூருவில் என்னென்ன போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன என்பதையும், இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகள் ஏதேனும் ரத்து செய்யப்பட உள்ளனவா என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
காவிரி நீர் பிரச்சனை, இந்தியாவில் மிக நீண்ட காலமாக உள்ள பிரச்சனை. காவிரி நீரை யார் எந்த அளவிற்கு பயன்படுத்துவது என்பதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே நீண்ட காலமாக ஓர் கருத்து வேறுப்பாடு உள்ளது. கர்நாடகா வழியாகவே காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு வருவதால், கர்நாடக அரசு திறந்துவிடும் நீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டிய சூழல் நம் தமிழ்நாட்டில் உள்ளது.

நீர் பற்றாமல் போகும் பட்சத்தில், கர்நாடக அரசிடம் இருந்து ஒவ்வொரு முறையும் வேண்டி கேட்க வேண்டியதாக உள்ளது. இதற்கு சில சமயங்களில் கர்நாடக அரசு செவி சாய்க்கும். அதேநேரம், கர்நாடக மக்களுக்கு நீர் போதவில்லை எனும்போது, நீரை குறைவாக திறந்துவிடும். அத்தகைய சூழ்நிலைகளில், தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை வாரியத்திடம் முறையிட்டு காவிரி நீரை பெற வேண்டியதாகிறது.
அவ்வாறுதான், தற்போது காவிரி மேலாண்மை வாரியத்திடம் முறையிட்டு சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பின் தமிழ்நாடு மீண்டும் அதிகளவில் காவிரி நீரை பெற உள்ளது. பல தரப்புகளில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் காவிரி நீரை வேண்டி எவ்வாறு போராட்டங்கள் நடைபெறுகிறதோ, அதேபோன்று கர்நாடகாவில் நீரை கொடுக்க கூடாது என போராட்டங்கள் கடந்த காலங்களில் இருந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு இப்போதும், காவிரி நீரை திறந்துவிட கூடாது என போராட்ட நடத்த பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவில் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, பெங்களூரில், நாளை செப்டம்பர் 26ஆம் தேதி பெரிய அளவிலான பந்த்-க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் பெங்களூர் பந்த் நடக்க உள்ளது.

இதன் காரணமாக, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) மற்றும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் (BMTC)-இன் கீழ் இயங்கும் அரசு பேருந்து சேவைகள் தடைப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில், KSRTC பணியாளர்களுக்கு கடந்த செப்.23ஆம் தேதி சனிக்கிழமை ஓர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் ஓர் இடத்தில் குறிப்பாக, "அனைத்து பணியாளர்களும் இந்த பந்த்தை எந்தவொரு பிரச்சனையின்றி, வெற்றிக்கரமாக முடித்துக் கொடுங்கள். BMTC-இல் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் எந்த பேருந்தும் இயங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசு பேருந்து கழகங்கள் மட்டுமின்றி கர்நாடகாவில் மற்ற பொது போக்குவரத்து சேவை நிறுவனங்களும் பெங்களூர் பந்த்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஓலா, உபேர் ஓட்டுனர்கள் & உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தன்வீர் பாஷா, "நிலம், மொழி & நீருக்கு சமரசமே கிடையாது. 2வது யோசனையின்றி, இந்த பந்த்-க்கு முழு ஆதரவளிக்கிறோம்" என கூறியுள்ளார். இருப்பினும் மற்ற பணிகளுக்காக பெங்களூர் மெட்ரோ தொடர்ந்து இயங்க உள்ளது. இதனால், பள்ளி, உணவகங்கள் உள்ளிட்டவை செப்.26ஆம் தேதியும் தொடர்ந்து செயல்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு இன்று (செப்.25) காலையில் இருந்து அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படியென்றால், நீரை திறக்கும் பணியை கர்நாடக அரசு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இது நிச்சயமாக, பெங்களூர் பந்த் ஒருங்கிணைப்பாளர்களை மேலும் கோவத்திற்கு உள்ளாக்கும். பெங்களூர் பந்த்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








