மகளிர் இலவச பேருந்து சேவைக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பா!! ஆட்டோ டிரைவர்கள் மாஸ் காட்டிட்டாங்க- திணறும் மாநிலஅரசு
நம் தமிழகத்தை போல், கர்நாடகாவிலும் மகளிருக்கு இலவச பேருந்து வசதி அமலில் உள்ளது. இந்த நிலையில், இதனை காரணம் காட்டி பெங்களூருவில் தனியார் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கான தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
பொது மக்களின் சுமைகளை குறைக்கும் விதமாகவும், அரசாங்கம் சார்பில் உதவி செய்யும் விதமாகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசாங்கங்களால் இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இலவசங்கள், நாட்டின் பொருளாதார நிலை வளர்ச்சி அடையும் வேகத்தை குறைக்கும் என்றாலும், இலவசங்கள் மூலமாக நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் ஓரளவிற்கு ஒரே மாதிரியான பொருளாதார நிலையை அடையலாம்.

எத்தனை ஆட்சிகள் மாறினாலும், இந்த விஷயத்தில் நம் தமிழ்நாடு அரசு எப்போதுமே உறுதியாக இருக்கிறது. இந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்த மிக அருமையான இலவச திட்டம் தான், மகளிருக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டம் ஆகும். மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில், தங்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்படும் பயணச்சீட்டை இலவசமாக பெற்றுக் கொண்டு மகளிர் பயணம் செய்ய முடிகிறது.
தின கூலியை எதிர்பார்த்து வாழ்க்கையை ஓட்டும் பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கு மகளிர் இலவச பேருந்து திட்டம் பயனுள்ளதாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அமோக வரவேற்பினால், இந்த திட்டத்தை கொண்டுவரும் முனைப்பில் நம் அண்டை மாநில அரசாங்கங்களும் உள்ளன. கர்நாடகா அரசு ஒரு படி மேலே போய், நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த திட்டத்தை விரைவாக அறிவித்து விட்டது.

கடந்த 2023 மே மாதம் நடைபெற்ற கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றதற்கு, தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த கட்சி சார்பில் வாக்குறுதியாக மகளிர் இலவச பேருந்து சேவை திட்டம் அறிவிக்கப்பட்டதை முக்கிய காரணமாக சொல்லலாம். பின்னர் ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை 'சக்தி திட்டம்' என்ற பெயரில் அமல்படுத்தியது.
நம் தமிழ்நாட்டை காட்டிலும், சக்தி திட்டத்தை கர்நாடாகவில் பெண்கள் பலர் அதிகளவில் உபயோகிப்படுத்தி வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். பேருந்துக்குள் இருக்கைக்காக மகளிருக்கு இடையே அவ்வப்போது நடக்கும் சண்டைகளும், கர்நாடகாவில் தினந்தோறும் அரசு பேருந்துகளில் பயணிப்போரும் இதற்கு காட்சி. இதனால், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளை இணைக்கும் கோரிக்கைகளை பல்வேறு தனியார் பேருந்து நிறுவனங்கள் முன் வைத்தன ஆனால் அவற்றில் சில கோரிக்கைகளை கர்நாடக போக்குவரத்து துறை ஏற்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சக்தி திட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு உள்ளன.
பெரியதாக எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, சரியாக யோசித்து, வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமையான இன்று (செப் 11) இந்த வேலை நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, எப்போதும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் கார் டாக்ஸிகளை சார்ந்திருப்போர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, பெங்களூரில் அரசு பேருந்துகளில் வழக்கத்தை காட்டிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இது ஒருநாள் வேலை நிறுத்தம் ஆகும். இன்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த வேலை நிறுத்தம் தளர்த்தப்படும். பெங்களூருவை ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு தனியார் பேருந்து சங்கங்கள், ஆட்டோ சங்கங்கள் என 32 சங்கங்கள் முழு ஆதரவு அளித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு பேருந்துகள் ஏழை, எளியோரின் தினசரி போக்குவரத்தில் ஓர் முக்கிய பங்கு வகிக்கின்றன. பைக் & கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், பைக் (அ) காரை வாங்க முடியாதவர்களின் நம்பிக்கை அரசு பேருந்துகளாக உள்ளன. அந்த அளவிற்கு, நாட்டின் ஓர் முக்கியமான பொது போக்குவரத்தான அரசு பேருந்து சேவையில் இலவசம் கூடாது என கூறுவது அரசு பேருந்துகளே கூடாது, அனைத்து மக்களும் எங்களிடமே வர வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கூறுவதை போல் உள்ளது.


Click it and Unblock the Notifications









