ஸ்கூட்டரை விற்றால் கூட அவ்வளவு காசு கிடைக்காதே!! பெங்களூர் போலீஸார் செய்த தரமான செயல்!
பெங்களூரில் சுமார் 99 போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்பட்ட இளைஞர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். யார் அந்த இளைஞர்? எவ்வாறு இத்தனை விதிமீறல்களில் ஈடுப்பட்டும் இத்தனை நாட்களாக போலீஸாரிடம் பிடிப்படாமல் இருந்துள்ளார்? தற்போது எவ்வாறு சிக்கியுள்ளார்? வாருங்கள் செய்திக்குள் போவோம்.
பெங்களூர், போக்குவரத்து நெரிசலுக்கு பிரபலமானது என சொன்னால் அது மிகையில்லை. சமீபத்தில் கூட, பந்த், தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங்களினால் பெங்களூரில் பெரும்பான்மையான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில், பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட எந்தவொரு போக்குவரத்து வசதியும் கிடைக்காததால், இளைஞர் ஒருவர் அலுவலகத்தில் இருந்து வீடு வரையில் சுமார் 12கிமீ தொலைவிற்கு நடந்தே சென்ற சம்பவம் கவனத்தை பெற்றது.

இவ்வாறு போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டாலும், சாலை விதிமீறல்களில் ஈடுப்படுவோரை பெங்களூரில் அவ்வளவாக பார்க்க முடியாது. நன்கு படித்து, நிறுவனங்களில் ஓர் முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்கள் அங்கு அதிகளவில் இருப்பது இதற்கு ஓர் காரணமாக சொல்லலாம். ஆனால் அதேநேரம், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் பெங்களூரிலும் சிலர் இருக்க தான் செய்கின்றனர்.
அத்தகையவர்களுக்கு எல்லாம், நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் இளைஞர் தலைவர் என சொல்லலாம். அந்த அளவிற்கு பல்வேறு போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் இவர் மீதும், இவரது ஸ்கூட்டர் மீதும் உள்ளன. இந்த நபரது விபரங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர். FIR பதிவு செய்து இந்த நபரை தற்சமயம் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவரது ஸ்கூட்டரும் போலீஸ் நிலையத்தில் உள்ளது.

பொதுவாக, சிறு சிறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்படுவோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்வது கிடையாது. ஆனால் இந்த நபர் மீது சுமார் 99 போக்குவரத்து விதிமீறல் பதிவுகள் உள்ளன. இவர் இன்னும் செலுத்த வேண்டிய அபராத தொகை மட்டும் ரூ.56,000 உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். அதாவது, சில விதிமீறல்களுக்கு அப்போதே இந்த நபர் அபராதத்தை செலுத்தியுள்ளார்.
இருப்பினும், இவ்வாறு அடிக்கடி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்படுவதினால் போலீஸார் தானாக முன்வந்து இவர் மீது FIR பதிவு செய்துள்ளனர். மேலும், ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நபரது சமீபத்திய சாலை விதிமீறலை பிரசன்னா குமார் என்பவர் வீடியோ உடன் டுவிட்டரில் பெங்களூர் நகர போலீஸாரையும், போக்குவரத்து & சாலை பாதுகாப்புக்கான துணை போலீஸ் இயக்குனர் அலோக் குமாரையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
வேகா சிட்டி சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலினால் சாலையின் எதிர்திசையில் இந்த நபர் தனது ஸ்கூட்டரில் சென்ற போது இந்த வீடியோவை பிரசன்னா குமார் காட்சிப்படுத்தி உள்ளார். இது அந்த நபரது 100வது போக்குவரத்து விதிமீறல் ஆகும். போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ள நபரது ஸ்கூட்டரின் வாகன பதிவெண் KA05EM1946 ஆகும்.
இணையத்தில் வாகன பதிவெண்ணை போட்டாலே, அந்த வாகனத்தின் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன என்பது தெள்ள தெளிவாக தெரிந்துவிடும். பிரசன்னா குமாரும் வாகன பதிவெண்ணை கொண்டு விதிமீறலில் ஈடுப்பட்டவரின் வாகனத்தை பற்றிய முழு விபரங்களையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவுகளை கண்ட பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தது மட்டுமின்றி, பிரசன்னா குமாரையும் வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்பங்களினால் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளதா என்பது தெரியாது, ஆனால் அத்தகைய செயல்களில் ஈடுப்படுவோர் விரைவாக போலீஸாரிடம் சிக்கிவிடுகின்றனர். பெங்களூரில் நடைபெற்ற மேற்கூறப்பட்ட சம்பவத்தில் கூட, டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தின் மூலமாகவே போலீஸார் விரைவாக சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த 100 விதிமீறல்களிலும் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே அடையாளம் காணப்பட்டவைகளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








