ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
பெங்களூர் (Bengaluru), தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக மாறி வருகிறது. வடக்கில் டெல்லி இருக்க, தெற்கில் பெங்களூர் என கூறும் அளவிற்கு கடந்த சில வருடங்களில் பெங்களூரு பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி காண துவங்கிய 1970ஆம் காலக்கட்ட சமயத்தில் மும்பை அபரிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டது.
அதேபோல் இப்போது, மென்பொருள் தொழிற்நுட்ப துறையின் அதிக தேவையினால் பெங்களூர் இந்தியாவின் மிக முக்கியமான நகரமாக மாறி கொண்டிருக்கிறது. ஏனெனில், இந்தியாவின் மென்பொருள் தலைநகரம் பெங்களூர் ஆகும். ஓர் நகரம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்கிறது என்றால், அந்த நகரத்துக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் ஆட்டோமேட்டிக்காக அதிகரித்துவிடும்.

குறிப்பாக, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்துவரும் தொழிலதிபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அளவில் அதிகரிக்கும். இந்த வகையில், பெங்களூரு விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2023 ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 3 கோடியே 75 லட்சம் விமான பயணிகள் பெங்களூரின் கேம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் 3 கோடியே 28 லட்சம் பேர் பெங்களூரின் உள்நாட்டு விமான நிலையத்திலும், 46 லட்சத்து 70,000 பேர் சர்வதேச விமான நிலையத்திலும் விமான பயணத்தை மேற்கொண்டவர்கள் ஆவர். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் சென்றவர்கள் மட்டுமின்றி, விமானத்தில் வந்தவர்களும் இந்த எண்ணிக்கைகளில் அடங்குவர். இதேபோல், 4 லட்சத்து 39,524 மெட்ரிக் டன் எடை கொண்ட பொருட்கள் கடந்த 1 ஆண்டில் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இது முந்தைய ஆண்டை காட்டிலும் 7.1% அதிகமாகும். 4 லட்சத்து 39,524-இல் 2 லட்சத்து 66,186 மெட்ரிக் எடை கொண்ட பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதாவது, மொத்த சரக்கில் பாதிக்கு மேல் வெளிநாட்டு ஏற்றுமதி/ இறக்குமதி ஆகும். பெங்களூர் விமான நிலையத்தில் சர்வதேச ஏற்றுமதி/ இறக்குமதி முந்தைய ஆண்டை விட 4% அதிகரித்துள்ளது.
புதிய ஏர்லைன்களை இணைப்பதுடன், பெங்களூருக்கு விமான சேவையை வழங்கும் மற்ற நகரங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து இந்த வருடத்தில் இந்த எண்ணிக்கைகளை மேலும் அதிகரிக்க விரும்புவதாக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். பெங்களூர் விமான நிலையத்தில் சமீபத்தில்தான் 2வது முனையம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, பெங்களூரில் இருந்து இந்தியாவில் 80 பகுதிகளுக்கும், 28 சர்வதேச பகுதிகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. அதாவது, ஒட்டு மொத்தமாக பெங்களூரில் இருந்து 108 வெவ்வேறான பகுதிகளுக்கு விமானத்தில் சென்று வரலாம். பெங்களூரின் அபரிதமான வளர்ச்சி, நம் சென்னையின் வளர்ச்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் கொஞ்சம் தாமதப்படுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை ஒரு வருடத்தில் சராசரியாக 2 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர். 2022-23ஆம் நிதியாண்டில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 4 லட்ச மெட்ரிக் டன் எடை கொண்ட பொருட்கள் விமானத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இது பெங்களூருடன் ஒப்பிடுகையில் சற்று குறைவே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றாலும், பெங்களூர் அளவிற்கு இல்லை என்பதே உண்மை. சரக்கு ஏற்றுமதி/ இறக்குமதியில் வேண்டுமென்றால் பெங்களூருக்கு இணையாக சென்னை வரலாம். ஏனெனில், மும்பையை போல் சென்னையிலும் தொழில் வளாகங்கள் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications









