35 நிமிஷத்தில் சார்ஜ் நிரப்பிடலாம்... ஒட்டுமொத்த இந்தியாவே பெங்களூருவை பார்த்து வியக்குது! சென்னைக்கு எப்போ?
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles), இந்தியா உள்பட உலகம் முழுவதுமே வரவேற்பு அதிகரித்து வருகிறது. உலக வெப்பமயமாதல் என்கிற உலகளாவிய பிரச்சனையினால் எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நம் இந்திய அரசு உள்பட பல நாடுகள் தீவிரமாக உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கு பெட்ரோல்/ டீசலை போன்று சார்ஜிங் வசதிகளும் பரவலாக எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டியது அவசியமாகும். வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி எலக்ட்ரிக் வாகனங்கள் உடன் வழங்கப்படுகின்றன என்றாலும், அது பல மணிநேரங்களை எடுத்துக் கொள்வது பல நேரங்களில் அசவுகரியமாக விளங்குகிறது.
விரைவாக சார்ஜ் செய்யும் தொழிற்நுட்பங்கள் தற்போதைக்கு பரவலாக பயன்பாட்டில் இல்லை. தற்போதுதான் அவற்றை கண்டுப்பிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரம், விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மையங்களும் புதியது புதியதாக தற்போதைக்கு முக்கியமான மாநகரங்களில் மட்டுமே கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், பெங்களூருவில் இந்தியாவிலேயே மிக பெரிய எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த இவி ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையம் ஆனது மொத்தம் 210 சார்ஜிங் பாயிண்ட்ஸை கொண்டவை ஆக உள்ளது. இவற்றில் வெறும் 35 நிமிடங்களில் எந்தவொரு எலக்ட்ரிக் வாகனத்திலும் முழுமையாக சார்ஜ் நிரப்பிக் கொள்ளலாமாம்.
இந்தியாவில் பல பகுதிகளில் சார்ஜிங் நெட்வொர்க்கை கொண்டுள்ள சார்ஜ் ஜோன் (ChargeZone) நிறுவனம் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் இந்த மிக பெரும் ஃபாஸ்ட் இவி சார்ஜிங் நிலையத்தை பராமரிக்க உள்ளது. சார்ஜ் ஜோன் ஆனது டாக்ஸி உள்ளிட்ட தொழில்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமின்றி, தனிநபர் இவி பயன்பாட்டாளர்களுக்கும் சார்ஜிங் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனமாக விளங்குகிறது.
பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் இவி சார்ஜிங் மையத்தின் அதிகப்படியான சார்ஜிங் பாயிண்ட்ஸ் மட்டுமின்றி, அவற்றை அமைத்த விதமும் நம்மை வசீகரிக்கிறது. அந்த அளவிற்கு நேர்த்தியான டிசைனில் ஒவ்வொரு சார்ஜிங் பகுதிகளும் வாகனம் நிறுத்தும் இடத்துடன் சீராக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் 72 ஏசி மற்றும் 138டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மையத்தில் அமைந்துள்ள 210 சார்ஜிங் பாயிண்ட்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 1,000 எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்பட உள்ள இந்த சார்ஜிங் மையத்தில் ஒரே நேரத்தில் 150 எலக்ட்ரிக் 4-சக்கர வாகனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
அதாவது, ஒரே நேரத்தில் 210 சார்ஜிங் பாயிண்ட்களிலும் எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய முடியாது. ஏனெனில், சில சார்ஜிங் பாயிண்ட்கள் பிரத்யேகமாக எலக்ட்ரிக் 2-வீலர்/ 3-வீலர்களுக்கு என்று நிறுவப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட இந்த சார்ஜிங் மையத்தின் கவர்ச்சிக்கரமான அம்சம் என்னவென்றால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்த மையம் சூரிய ஒளியின் ஆற்றலை தான் மின்சாரமாக மாற்றி வழங்க உள்ளது. இதற்காக, இந்த பகுதியின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்வது இன்றைய காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை சமாளிக்க, இவ்வாறான பெரிய அளவிலான ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அவசியமாகின்றன. பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் இவ்வாறான சார்ஜிங் மையங்கள் 4,5 இருந்தாலே போதும் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








