டிராஃபிக்கால் வருமானத்தை இழக்கும் நகரம்! எந்த நகரம் தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க.. அடேயப்பா இத்தன ஆயிரம் கோடியா!!
இந்தியாவில் உள்ள ஓர் நகரம் வாகன போக்குவரத்து நெரிசலால் மட்டும், அதாவது, டிராஃபிக்கால் மட்டும் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இழப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த நகரம்? நகரத்தின் கடும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் என்ன? என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்மில் பலர் சென்னை போரூர் போக்குவரத்து நெரிசலைப் பற்றி பெருசாக பேசிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், இந்தியாவின் குறிப்பிட்ட நகரம் ஒன்று தினந்தோறும் போரூர் டிராஃபிக்கையே மிஞ்சும் அளவிற்கு டிராஃபிக் ஜாமைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. நீங்கள் யூகித்து இருப்பது பெங்களூரு என்றால் அது சரியே.

இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இருக்கின்றது. இந்த நகரமே தற்போது அதன் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆண்டு ஒன்றிற்கு மட்டும் அது 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை இழப்பதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.
நகரத்தில் 60 க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருந்த போதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசலை பெங்களுரூ சந்தித்துக் கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகரமாக மட்டுமல்ல, அம்மாநிலத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் பெங்களூரு இருக்கின்றது. இங்கேயே ஏகப்பட்ட ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஐடி துறையே அந்நகரத்திற்கும், அம்மாநிலத்திற்கும் பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டி தருகின்றது. மேலும், அதுவே நகரத்தின் மிக மோசமான போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக இருக்கின்றது. நாளுக்கு நாள் மக்கள் புழக்கம் அதிகரித்து வருவதனால், அங்கு வாகனங்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயர்ந்துக் காணப்படுகின்றது.
காலை, மாலை என அனைத்து நேரங்களிலும் பெங்களூருவின் சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றன. விடியற்காலைகளில்கூட இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதன் விளைவாகவே நகரத்தின் உற்பத்தி திறன் பெருமளவில் குறைந்திருப்பதாக போக்குவரத்து நிபுணர் எம்என் ஸ்ரீஹரி தெரிவித்து இருக்கின்றார்.
இவருடைய குழுவே பெங்களூரு அதிக போக்குவரத்து நெரிசால் என்ன மாதிரியான பாதிப்புகளை எல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்கிற ஆய்வை செய்து தற்போது வெளியிட்டு இருக்கின்றது. நகரத்தின் அதீத போக்குவரத்து நெரிசல் அதன் உற்பத்தி திறனை தடுப்பது மட்டுமல்லாமல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பினை அது ஏற்படுத்துவதாக அவரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிப்படையத் தொடங்கி இருக்கின்றது. கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நகரத்தின் மோசமான உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றத்தாழ்வான சாலைகளே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. இதுதவிர நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் பிற கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதனாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்துக் காணப்படுகின்றது.
பெங்களூருவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 14.5 மில்லியனாக உள்ளது. அதவேளையில், சாலைகளிலோ 1.5 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த மிகப் பெரிய எண்ணிக்கையே பெங்களூருவில் டிராஃபிக் மிதமிஞ்சிக் காணப்படுவதற்கான காரணமாக அமைந்திருக்கின்றது. தகவல் தொழில்நுட்ப துறைக்கு மட்டும் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக டிராஃபிக்கிற்கு மேலே பார்த்தவை மட்டுமே காரணங்கள் என கூறிவிட முடியாது. வாகன ஓட்டிகள், குறிப்பாக, பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்துவதே இல்லை. நடு வழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பிற வாகனங்களின் போக்குவரத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகின்றது.
இதுதவிர, பெங்களூரு வாசிகள் பலர் வாகனங்களை நிறுத்த முறையான பார்க்கிங்கை பயன்படுத்துவதில்லை என கூறப்படுகின்றது. இதனாலும், சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதுபோன்று பல்வேறு காரணங்களை ஆய்வு நிறுவனம் அடுக்கிக் கொண்டே போகின்றது. மேலும், இதை சரி செய்தாலே கணிசமான அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பெங்களூரு வாசிகள் பயணங்களுக்குச் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக மெட்ரோ ரயில், அரசு மற்றும் பிற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். இத்துடன், நகரத்தில் கூடுதல் பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ மற்றும் மோனோ ரயில்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர பரிந்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்தால் மட்டுமே நகரத்தின் போக்குவரத்து நெரிசலைப் பெரிய அளவில் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நாகரங்களையே பார்க்க முடியாது. சென்னை தொடங்கி டெல்லி வரை என அனைத்து நகரங்களிலும் வாகனங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதைக் கட்டுக்குள் கொண்டு வர அரசும், போக்குவரத்துத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications