கோடி கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலையில் 2-வீலர்களுக்கு அனுமதி மறுப்பா? ஆட்டோகளுக்கும் கூடவா!!
பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களையும், ஆட்டோ ரிக்ஷாக்களையும் இயக்க அனுமதி மறுக்கும் திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் நமது மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையாக டெல்லி- மும்பை விரைவுச்சாலை ஒவ்வொரு பகுதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து இந்த நெடுஞ்சாலையை திறந்து வைத்தார்.

தென்னிந்தியாவில் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ள பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே டோல் கட்டணங்கள் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்த டோல் கட்டணங்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிக தொகையில் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.
அதனை தொடர்ந்து தற்போது, நெடுஞ்சாலையில் 2-வீலர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்பட மித வேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு அனுமதி மறுக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் அளித்த பேட்டியில், "அதிவேக பயண வழித்தடத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்றன.

பைக்குகள், ஆட்டோக்கள் மற்றும் விவசாய டிராக்டர்கள் போன்ற மெதுவாக நகரும் வாகனங்கள் பொதுவாகவே அதிவேக பயணத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸஸ்-கண்ட்ரோல்டு நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படுவது இல்லை. பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலை இந்த விதியில் உட்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு அரசு சார்பில் விரைவில் வெளியிடப்படலாம்" என்றார்.
பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலை மொத்தம் 10 பாதைகளை கொண்டது. இதில் மையத்தில் உள்ள 6 பாதைகள் ஆரம்பத்தில் இருந்தே அதிவேக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இவற்றிற்கு இரு பக்கங்களிலும் உள்ள 2-வழி சாலைகளில் மட்டுமே 2-வீலர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மிதவேக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மத்திய நெடுஞ்சாலை துறையில் இருந்து தற்போது கசிந்துள்ள தகவலின்படி பார்த்தோமேயானால், நெடுஞ்சாலையின் ஓரங்களில் உள்ள இந்த 2-வழி சாலைகளில் இருந்தும் மிதவேக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 118 கிமீ நீளத்தில் பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலையை ரூ.8,408 கோடி செலவில் உருவாக்கியுள்ளனர். இந்த விரைவுச்சாலையின் வழியாக வெறும் 3.5 மணிநேரத்தில் பெங்களூருவில் இருந்து மைசூரை சென்றடைந்துவிட முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எங்களை கேட்டால், தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஏதோ குழப்பம் உள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு மொத்தமாக மிதவேக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எங்களுக்கு தெரிந்தவரையில், நெடுஞ்சாலையின் மைய 6 பாதைகளிலும் தற்சமயம் மிதவேக வாகனங்கள் இயங்கி கொண்டிருக்கலாம். அவற்றை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை தயாராகி வருகிறது போலும்.


Click it and Unblock the Notifications









