சிக்னல் கம்பத்திற்கு மரியாதை செலுத்திய பெங்களூரு போலீஸார்... இந்த கம்பத்திற்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?..
பெங்களூரு நகர போலீஸார் போக்குவரத்து சமிக்ஞை மின் விளக்கு கம்பத்திற்கு மரியாதைச் செலுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று தகவலை இப்பதிவில் காணலாம்.

போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்னல்களின் பங்கு அளப்பரியது. போக்குவரத்து போலீஸார்கள் இல்லாத நேரங்களிலும் சாலையில் வாகன நெரிசல் ஏற்படாது வண்ணம் போக்குவரத்தை இந்த சிக்னல்கள் சீரமைத்து வருகின்றன. இவையே ஓர் வாகனம் நிற்க அல்லது நகர அல்லது புறப்பட தயாராக வேண்டும் என்பதனை தீர்மானிக்கின்றன.

ஒரு முறை தேவையான கால இடைவெளியை இதில் செட் செய்துவிட்டால் யாருமில்லாமல் அவை தானாக இயங்கிக் கொண்டே இருக்கும். கடந்த காலங்களில் போலீஸார் இதனை பொத்தான்கள் மூலம் கட்டுப்படுத்தி வந்தனர். தற்போதைய அதி-நவீன தொழில்நுட்பங்கள் இந்த பணிகளையும்கூட குறைத்துவிட்டன.

ஆகையால்தான் போக்குவரத்து சமிக்ஞை மின் விளக்குகளை தங்களின் உற்ற நண்பனாக போக்குவரத்து போலிஸார் பார்க்கின்றனர். குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் தங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக காவர்கள் இதனை பார்க்கின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெங்களூரு நகர போலீஸார் ஓர் சிக்னல் கம்பத்திற்கு மரியாதைச் செலுத்திய சம்பவம்குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காவல்துறையின் இந்த திடீர் மரியாதை செயலுக்கு என்ன காரணம் என்றுதானே கேட்குறீங்க?, இந்த சிக்னல் பெங்களூரு நகரத்தில் முதன்முறையாக பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சிக்னல் ஆகும்.

எனவேதான் காவல்துறையினர் இந்த சிக்னலுக்கு சிறப்பு மரியாதைச் செலுத்தியிருக்கின்றனர். என்ஆர் சந்திப்பில் இந்த சிக்னல் இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாகவே கடந்த திங்களன்று (மார்ச் 15) பெங்களூரு நகர காவல்துறை சிக்னல் கம்பத்திற்கு சிறப்பு மரியாதைச் செலுத்தியது.

1963ம் ஆண்டில் இந்த சிக்னல் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாக நகர காவல் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கின்றார். அந்த ஆண்டில் நகரத்தின் காவல் ஆணையராக சி சந்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆணையராக பிஎன் கருடாசார் ஆகியோர் பணியில் இருந்திருக்கின்றனர்.

"60 ஆண்டுகளுக்கு முன்னரே என்ஆர் சந்திப்பு மிகவும் பிஸியான சாலையாக இருந்தது. எனவே, போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. இதனைக் குறைக்கும் நோக்கிலேயே முன்னாள் காவல் ஆணையர் சந்தி, இந்த பகுதியில் சிக்னல் கம்பத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது" என 93 வயதான முன்னாள் காவலரும், கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உதய் கருடாசாரின் தந்தையுமான பிஎன் கருடாசார் கூறினார்.

Source: DH
பெங்களூருவின் முதல் டிராஃபிக் சிக்னலை அமைக்க சில முக்கிய பொருட்கள் சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்டதாக அவர் கூறினார். இவ்வாறே படி படியாக போக்குவரத்து சிக்னல்கள் நகரத்தின் பல முக்கிய பகுதிகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சமிக்ஞை மின் விளக்கு கம்பத்திற்கு போலீஸார் மரியாதை செலுத்திய சம்பவம் அந்நகர மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








