பெங்களூருக்கு காருல போக போறீங்களா! வெளிமாநில பதிவெண் கொண்ட சொகுசு கார்களா தேடி சிறை பிடிச்சிருக்காங்க!!
நகரத்திற்குள் வலம் வந்த சில வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை பெங்களூரு ஆர்டிஓ அதிகாரிகள் சிறைப் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் ஐந்து கார்கள் வரை தற்போது அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. ஆடி சொகுசு கார் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற ஆடம்பர கார் மாடல்களும் தற்போதைய பறிமுதலில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் காரணத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் குறிப்பிட்ட அந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக மாநிலத்திற்கான வரியைச் செலுத்தாமல் மாநிலத்திற்குள் இயக்கி வந்ததன் விளைவாகவே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. அதாவது, அனைத்து வாகனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கூறியே தற்போது பறிமுதல் சம்பவத்தை பெங்களூரு ஆர்டிஓ அதிகாரிகள் செய்திருக்கின்றனர்.

குறிப்பு: படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்து (அமலாக்கம்) கூடுதல் கமிஷனர் சி மல்லிகார்ஜுனா-வும் கருத்து தெரிவித்து இருக்கின்றார். தற்போது பிடிபட்ட வாகனங்கள் ஹரியானா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களின் பதிவெண்ணைக் கொண்டவை என்று அவர் கூறி இருக்கின்றார். இவற்றின் உரிமையாளர்கள் இங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக கார்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதன்விளைவாகவே அந்த வாகனங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கமிஷனர் தெரிவித்து இருக்கின்றார். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாகனங்கள் நீண்ட காலம் வேற்று மாநிலத்தில் வைத்து பயன்படுத்தப்படும் எனில் அந்த புதிய மாநிலத்தின் ஆர்டிஓ-விடம் உரிய அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், மாநிலத்தில் ஆர்டிஓக்களிடம் இருந்து என்ஓசி பெற வேண்டும். இதைச் செய்ய தவறும்பட்சத்திலேயே வாகன பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், வரி ஏய்ப்பில் சொகுசு கார்களுடன் சேர்த்து சில மோட்டார்சைக்கிள்களும் ஆர்டிஓ-க்களால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. அங்கீகரிக்கப்படாத பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களையே அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
அனைத்து வாகனங்களும் உள்ளூர் வரி விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதும், வாகன உரிமையாளர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தவிர்ப்பதுமே இந்த கடும் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். கர்நாடகாவில் தற்போது வெளிமாநில வாகனங்களின் நடமாட்டம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டெல்லி மற்றும் வட மாநில பதிவெண் கொண்ட வாகனங்களின் நடமாட்டம் சமீப காலமாக பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்த மாநிலங்களில் பழைய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக அங்குள்ள வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களின் பழைய வாகனங்களை மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக சொகுசு வாகனங்கள் சில யாரும் நம்ப முடியாத அளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலை பெங்களூரு போன்ற கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களின் நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இதை உணர்ந்தே அதிகாரிகள் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தீவிரமாகக் கண்கானிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே நீண்ட காலமாக ஆர்டிஓ-விடம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த ஐந்து சொகுசு கார்களை காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். வரி ஏய்ப்பில் ஒரு சிலர் ஈடுபடுவதன் வாயிலாக மாநிலத்தின் வருவாய் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை அடுத்தே மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஆர்டிஓ அதிகாரிகள் களமிறங்கி இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்நாடாகவில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இதேமாதிரியான சூழலே நிலவுகின்றது. ஆகையால் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இதே மாதிரியான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மிகக் கடுமையான நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








