இந்த புதிய பஸ் ஸ்டாப்ல குடும்பமே நடத்தலாம் போலிருக்கு.. ஒருமுறை போய் உட்கார்ந்தா எழுந்து போக மனசே வராது!
விமான நிலையத்திற்கு இணையாக சகல வசதிகளுடன் ஓர் பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுத்தம் எங்கு அமைந்துள்ளது?, அதன் சிறப்பு வசதிகள் என்ன?, என்பது போன்ற மிக முக்கியமான தகவல்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
விமான நிலையங்களுக்கு இணையாக ரயில் நிலையங்களை மாற்றும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் சில பழைமையான ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு விரைவில் மாற இருக்கின்றன. தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழலில் நமது அண்டை மாநிலம் ஒன்றில் பேருந்து நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்காலிக குடும்பத்தை நடத்தும் அளவிற்கு மிக சிறப்பான வசதிகள் அந்த பேருந்து நிலையத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆகையால், பலரின் கவனத்தை இந்த ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஏர்போர்ட் பேருந்து நிறுத்தமே நவீன வசதிக் கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இன்போசிஸ் அவென்யூவிற்கு (ஐடி நிறுவனம்) நேர் எதிரில் இந்த நிறுத்தம் அமைந்து இருக்கின்றது.

இங்கு பன்முக வசதிகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தோம், அந்தவகையில், செல்போன் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, லேப்-டாப்பை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சேனிட்டரி நேப்கின் விற்பனை மெஷின், ஸ்மார்ட் குப்பைத் தொட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, நொறுக்கி தீனி விற்பனை செய்யும் கருவியும் அந்த பேருந்து நிலையத்தில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது.
இதுமாதிரியான சகல வசதிகள் கொண்ட பேருந்து நிறுத்தை இந்தியாவில் எந்த மூலையிலும் காண முடியாது. எலக்ட்ரானிக்ஸ் சிட்டி இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப் அத்தாரிட்டி (Electronics City Industrial Township Authority)-யின் கீழே இந்த பேருந்து நிறுத்தம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனை சத்யவதி, பிஎம்டிசியின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் எம்ஏ சலீம் ஸ்பெஷல் கமிஷனர் ஆஃப் போலீஸ், டிராஃபிக் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இங்கு வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத் தொட்டி 70 சதவீதம் நிரம்பிய உடனே எச்சரிக்கையை வழங்கத் தொடங்கி விடும்.
இது குப்பையை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். மேலும், அதிகளவில் குப்பையை பொதுமக்கள் திணிக்காமல் இருக்கவும் இது உதவியாக இருக்கும். இதுதவிர, அங்கு ஓர் திரை வழங்கப்பட்டு இருக்கும். அதில், அங்கு நிற்கும் பேருந்துகள், அவற்றின் வழித் தடம் மற்றும் பயண நேரம் என பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

இத்துடன் கூடுதல் புதுமுயற்சியாக பேருந்து நிறுத்தத்தைச் சுற்றிலும் பசுமையாக உணர்வை வழங்கும் விதமாக செடிகள் மற்றும் புல் தரைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆகையால், இந்த ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் ஓர் புதுவிதமான அனுபவத்தை அந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துவோர்க்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கூடுதலாக பயணிகள் பாதுகாப்பிற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிசிடிவி கேமிரா, இரு வழி அவசர கால உதவியை நாடும் அம்சம் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. மேலும், இதேபோல் மாநிலம் முழுவதும் அமைக்க நெட்டிசன்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









