"ஒரு துளி தண்ணி கூட சிந்தள"... இந்தளவு ஸ்மூத்தா? ரோல்ஸ் ராய்ஸ் காரை மிஞ்சிய இந்திய ரயில்... வீடியோ!
இந்திய ரயில்வேஸ் பற்றிய சுவாரஷ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக சொகுசான அனுபவத்தை வழங்கக்கூடிய பல்வேறு கார்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவற்றிற்கெல்லாம் தலைவனாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் கார்களில் பயணிப்பது கப்பலில் மிதப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும்.

எந்த மாதிரியான கரடு, முரடான சாலைகளில் பயணித்தாலும் நாம் சாலையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வை அதுவழங்காது. இத்தகைய சொகுசான பயணத்திற்கு பெயர்போன வாகனங்களாக ரோல்ஸ் ராயஸ் நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன.

இந்நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இணையான சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் திறனை இந்திய இரயில் பாதை ஒன்று பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ரயில்வேத்துறை அமைச்சகம் அதன் அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் ஓர் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

கண்ணாடி டம்ப்ளரில் தண்ணீர் நிரம்பியிருக்க ஓடும் ரயிலைக் காட்சிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ இருக்கின்றது. இந்த வீடியோவை ரயில் பயணம் எந்தளவிற்கு சொகுசானதாக மாறியுள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே ரயில்வேத்துறை அமைச்சகம் பெறுமையுடன் வெளியிட்டிருக்கின்றது.

மிக தெளிவாக கூற வேண்டுமானால் ரயில் அதி வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றுக்கொண்டிருக்கின்ற வேலையிலும், நீர் நிரம்ப இருக்கும் கண்ணாடி டம்ப்ளரில் இருந்து சிறு துளி நீர்கூட வெளியேறவில்லை. மேலும், அந்த டம்ப்ளர் சிறியளவுகூட அங்கும் இங்குமாக நகரவில்லை இதையே வீடியோவின் வாயிலாக அமைச்சகம் வெளிக்காட்டியுள்ளது.

நம்மில் பெரும்பாலானோர் சொகுசான பயணத்தை மட்டுமே விரும்பக்கூடிய நபர்களாக இருக்கின்றோம். எனவேதான், முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்போது சொகுசு வாகனங்களின் அறிமுகம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே பயண பிரியர்களைக் கவரும் வகையில் ரயில்வே அமைச்சகம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, சாலை வழி பயணத்தைக் காட்டிலும் ரயில் வழி பயணம் மிகவும் சொகுசான மற்றும் பாதுகாப்பானது என்பதை இந்த வீடியோவின் வாயிலாக வெளிக்காட்டியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே ரயிலின் கடைசிப் பெட்டியில் தண்ணீர் ததும்பும் அளவிற்கு கண்ணாடி டம்பளரில் நீர் நிரப்பட்டு, அதை படமாக எடுத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்திய ரயில்வேத்துறை கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு-மைசூரு இடையேயான ரயில் வழிப்பாதையை புதுப்பிக்கும் (புனரமைக்கும்) பணியை மேற்கொண்டது. தற்போது இப்பணி நிறைவுற்றிருக்கின்றது. சுமார் 130 கிமீ தூரம் உள்ள இந்த தடத்தை ரூ. 40 கோடி அளவில் இந்திய ரயில்வேத்துறை புதுப்பித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்ற வீடியோவாகும். புதுப்பித்தல் பணி எந்தளவிற்கு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது என்பதை ஆராயும் நோக்கில் 'தண்ணீர் டம்ப்ளர்' பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதே ஒரு துளி நீர்கூட சிந்தாமல், பணி சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிக்காட்டியது.

இந்த பரிசோதனையின்போது ரயில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் சீறிப் பாய்ந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த புனரமைப்பு பணியில் மேடு பள்ளங்கள் சீர் செய்யப்பட்டு, பழுதான தண்டவாளம் தாங்கிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் பிரம்மிப்பை ஏற்படுத்தும் முடிவுகள் தற்போது கிடைத்திருக்கின்றன.

இதுதவிர பெங்களூரு-மைசூரு வழித்தடத்தைச் சிறப்பிக்கும் இன்னும் பல பணிகளை அது மேற்கொண்டிருக்கின்றது. எனவேதான் முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வழித்தடம் மிகவும் சௌகரியமானதாக மாறியிருக்கின்றது. இதை வைத்தே சொகுசு கார்களுக்கு இணையான லக்சூரி வசதியை இந்த வழித்தடத்தில் இயங்கக்கூடிய ரயில்கள் பெற்றிருக்கின்றது என ரயில்வேத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








