பெங்களூரில் என்ன தாங்க நடக்குது? காவிரி பிரச்சனையில் சிக்கி சின்னா பின்னமாகும் மக்கள் - டிராஃபிக் அதிகமாகுது!!
இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் எந்த அளவிற்கு மோசமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
காவிரி நீர் பிரச்சனை கர்நாடகாவில் தலை விரித்தாடுகிறது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று டெல்லியில் இருந்து உத்தரவு வெளிவந்தததை அடுத்து, கர்நாடகா அரசு வேறு வழியின்றி அணையில் இருந்து நீரை திறந்துவிட்டது. கர்நாடகாவில் உள்ள மக்களுக்கே இருப்பில் உள்ள காவிரி நீர் பற்றாது எனும் பட்சத்தில், தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விடக்கூடாது என கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதன் எதிரொலியாக, கடந்த செப்.29ஆம் தேதி கர்நாடகா மாநிலம் முழுவதும் பந்த் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்த கர்நாடகா மாநிலமும் ஸ்தம்பித்து போனது. குறிப்பாக, தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏனெனில், ஒரே வாரத்தில் பெங்களூரில் இரண்டு முறை பந்த் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மொத்த கர்நாடகா பந்த்க்கு 2 நாட்களுக்கு முன் பெங்களூர் பந்த் அனுசரிக்கப்பட்டது.
பந்தினால் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை. ஆன்லைன் டாக்ஸி சேவைகள் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்பட்டு இருந்தன. பொதுமக்களின் அவசர தேவைக்காக மெட்ரோ இரயில் சேவையை மட்டும் கர்நாடக அரசாங்கம் இடையூறு இன்றி செயல்படுத்தியது. இருப்பினும், மெட்ரோ இரயில் நிலையத்திற்கும், அங்கிருந்து வேறொரு இடத்திற்கும் செல்வதற்கு போக்குவரத்து சேவை தேவைப்பட்டது.

இவ்வாறு, பெங்களுரில் அடுத்தடுத்து பந்த் அமல்படுத்தப்பட்டதால், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், அவசர பணிகளை செய்து முடித்துவிடவும், பந்த்க்கு முந்தைய நாட்களில் மக்கள் தீவிரமாக ஆர்வம் காட்டினர். இதனால், பெங்களூரில் பந்த்க்கு முந்தைய நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஒரேடியாக அதிகப்பட்சத்தை தொட்டது.
குறிப்பாக, கடந்த செப்.27ஆம் தேதி மாலையில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் பெங்களூர் முழுவதிலுமே நிலவியது. இணைய டாக்ஸி சேவைகளை கூட முறையாக செயல்படுத்த முடியாமல் கார்ப்பிரேட் நிறுவனங்கள் திணறின. அத்தகைய சமயத்தில், பேருந்து, ஆட்டோ, டாக்ஸி என எந்த போக்குவரத்து சேவையும் கிடைக்காததால் பெங்களூரில் இளைஞர் ஒருவர் சுமார் 12 கிமீ தொலைவிற்கு நடந்தே வீட்டிற்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் போக்குவரத்து நெரிசலாக இருந்தாலும், மெட்ரோ இரயிலில் அந்த அளவிற்கு கூட்டம் இருந்திருக்காது. அல்லது குறைந்தப்பட்சம் மெட்ரோ இரயிலில் கூட்ட நெரிசலிலாவது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றிருக்க முடியும். ஆனால், 12கிமீ தொலைவிற்கு நடந்து வீட்டிற்கு சென்றுள்ள இந்த நபரின் அலுவலகம் உள்ள இடத்தில் மெட்ரோ இரயில் சேவையும் இல்லை போல.
இதுகுறித்து அந்த நபரின் நண்பர் டுவிட்டரில், "என் நண்பன் இன்று பெங்களூரில் 12கிமீ தொலைவிற்கு நடந்தே வீட்டிற்கு வந்தான். அவனுக்கு கேப்/ ஆட்டோ/ ரேபிடோ அல்லது வேறெதுவும் கிடைக்கவில்லை. எல்லா போக்குவரத்து வழிகளையும் பெற்ற பிறகும், வாழ்க்கை தரம் இந்த நகரத்தில் லோ கிளாஸ் மக்களை தான் தாக்குகிறது" என குறிப்பிட்டு உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர் புது, புது டெக்னாலஜிஸை கண்டுப்பிடிப்பதில் மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலிலும் ஃபேமஸானது. பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்கிற பேச்சு இன்றில்லை, கடந்த பல வருடங்களாகவே உள்ளது. இந்த நபரை போன்று, பலர் பல சமயங்களில் நடந்தே அவர்களது வசிப்பிடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், இந்த நபர் சுமார் 12கிமீ தொலைவிற்கு நடந்து சென்றுள்ளார் என்பது உண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









