நீதான்யா டிரைவரு... உன்னைய வெச்சி தான் வண்டி ஓட்டனும்!! பென்ஸ் காரில் உங்க ஓட்டலுக்கு சாப்பிட வந்தது குற்றமா?
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற விலையுயர்ந்த கார்களை பல இலட்ச ரூபாய்களை கொடுத்து வாங்குவதை காட்டிலும், அவற்றை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலையே என பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், பென்ஸ் கார்களில் சிறிய பிரச்சனை என்றாலே பல ஆயிர ரூபாய்களை செலவழிக்க வேண்டியிருக்கும். பெரிய பிரச்சனை என்றால் பல இலட்ச ரூபாய்கள் வரையில் கூட செல்லும். அப்படியொரு இக்கட்டான சூழலை தான் பெங்களூருவில் ஒரு பென்ஸ் கார் உரிமையாளர் சந்தித்துள்ளார்.
உண்மையை சொல்லப்போனால், இந்த பென்ஸ் காரில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரின் உரிமையாளர் காரணம் இல்லை. வேறொருவர் செய்த தவறுக்கு இவர் பல இலட்ச ரூபாய்களை செலவழிக்க நேர்ந்துள்ளது. பெங்களூருவில் நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுக்க கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெங்களூருவில் பெண்மணி ஒருவர் தனது ரூ.1.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அது கொஞ்சம் உயர் தரத்திலான உணவகம் என்பதால், இந்த பெண்ணின் பென்ஸ் காரை உணவகத்தின் பணியாளர்களே பார்க்கிங் ஏரியாவுக்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர்.
5-ஸ்டார் உணவகங்களில் இவ்வாறு கஸ்டமர்களுக்கு வேலை வைக்கக் கூடாது என்பதற்காக உணவகத்தின் பணியாளர்களே காரை பார்க்கிங் ஏரியாவுக்கு கொண்டு சென்று பார்க் செய்து கொடுப்பதையும், பின்னர் அவர்களே பார்கிங் ஏரியாவில் இருந்து மீண்டும் காரை உணவகத்தின் நுழைவு வாயிலில் கொண்டுவந்து நிறுத்துவதையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சில சினிமா திரைப்படங்களில் கூட இவ்வாறான காட்சிகளை காட்டியிருப்பார்கள்.

விலையுயர்ந்த பென்ஸ் கார் மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் உரிமையாளர்கள் கூட உணவகத்தின் பணியாளர்களை நம்பி தங்களது காஸ்ட்லீயான காரை கொடுக்கின்றனர். ஆனால், பெங்களூருவில் தற்போது நடந்துள்ள சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளான பென்ஸ் காரின் பெண் உரிமையாளரின் நம்பிக்கையை சம்பந்தப்பட்ட உணவகத்தின் பணியாளர்கள் கெடுத்துள்ளனர். உரிமையாளரிடம் இருந்து காரை வாங்கி சென்றவர்கள் ஜாலியாக தாங்கள் விரும்பிய வேகத்தில், தாங்கள் விரும்பிய பார்க்கிங் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதிவேகமாக ஓட்டி சென்றதில் ஒரு கட்டத்தில் கார் மோதலுக்கு உள்ளாகி உள்ளது. இது சிறிய மோதல் என நினைத்துவிட வேண்டாம். வலிமையான பென்ஸ் காரின் முன்பகுதி பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் பொனெட் (Bonnet) பகுதி அப்பளம் போல் நசுங்கியுள்ளதை இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
இன்னும் சொல்லப்போனால், காரின் உரிமையாளர் வந்து பார்க்கும் வரையில் காரின் பொனெட்டின் மீது பெரிய அளவிலான கற்கள் இருந்துள்ளன. காரின் நிலைமையை பார்த்ததும் உரிமையாளருக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. இதற்கு காரணமான உணவகத்தின் பணியாளர்கள் விபத்து ஏற்பட்ட உடனே அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தப்பித்து சென்ற அந்த பணியாளர்கள் பயந்தப்படியே, காரை சரிச்செய்ய ரூ.20 லட்சம் வரையில் செலவாகும் என கூறப்படுகிறது. போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிப்பதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகத்திடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், உணவக நிர்வாகமோ இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க, தப்பித்து சென்ற பணியாளர்களின் போலியான முகவரிகளை தந்தும், அவர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்கள் என கூறி சமாளித்தும் உள்ளது.
இதில் கடுப்பான அந்த பெண்மணி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசாரும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு ஆதரவாக பேசி, ரூ.20 லட்சத்திற்கு பதிலாக ரூ.2 லட்சம் மூலம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர். இந்த பிரச்சனையினால் உணவகத்தின் அன்றாட பணிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அவை எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளானது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இ.க்யூ.இ (EQE) என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். எலக்ட்ரிக் கார் (Electric Car) என்பதினால்தான், காரில் நம்பர் பிளேட் பச்சை நிறத்தில் இருப்பதை காணலாம். ரூ.1.40 கோடி என்பது இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.
மேலும், இது முழுவதுமாக ஆட்டோமேட்டிக் கார் என்பதால் ஓட்ட தெரியாமல் ஓட்டி உணவக பணியாளர்கள் இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், இது முழுக்க முழுக்க எலக்ட்ரிக் கார் ஆகும். வெளிநாடுகளில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் '500 4மேட்டிக்' என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஆதலால், தற்போது பெங்களூருவில் விபத்திற்கு உள்ளாகி இருப்பதும் அந்த ஒரு வேரியண்ட்டே ஆகும். மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் பென்ஸ் காராக கருதப்படும் இக்யூஇ ஆனது ஐரோப்பாவில் நடத்தப்பட்ட என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (NCAP Crash Test) 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்கு இந்த எலக்ட்ரிக் காரில் சுமார் 9 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, மற்றும் எல்லாவற்றையும் விட முக்கியமாக அடாஸ் (ADAS) உள்ளிட்டவையும் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. அளவில் பெரியதான பென்ஸ் காராக இருப்பினும், இதில் 5 இருக்கைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் காரில் 90.56kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது.
இந்த பேட்டரி பேக் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 408 பிஎஸ் மற்றும் 858 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 550கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் டாப்-ஸ்பீடு 210km/h ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு பவர்ஃபுல்லான மற்றும் பாதுகாப்பான எலக்ட்ரிக் பென்ஸ் காரை தான் இந்த பெங்களூரு உணவக ஊழியர்கள் நாசமாக்கி உள்ளனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கஸ்டமரின் பென்ஸ் காரை வைத்து ரீல்ஸ் (Reels) வீடியோ எடுக்க முயற்சித்த போது இந்த விபத்து நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, சமூக வலைத்தளங்களின் மோகம் தான் இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாக இருந்துள்ளது.


Click it and Unblock the Notifications








