எலக்ட்ரிக்கிற்கு மாறும் டபுள்-டக்கர் பேருந்துகள்!! 900 பேருந்துகளை வாங்க மும்பை மாநகராட்சி திட்டம்!
இந்தியா பண்பாடு மற்றும் கலாச்சாரம் மிகுந்த நாடுகளுள் ஒன்று என்பது உலகறிந்த விஷயம். அதிலிலும் நம் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மும்பை பல்வேறு கலாச்சார நினைவுச்சின்னங்களையும், கட்டிடங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதுவரையில் மும்பைக்கு சென்றுள்ளவர்களுக்கும், அங்கு வசிப்பவர்களுக்கும் இது நன்றாக தெரியும்.

இந்த வகையில் மும்பையில் டபுள்-டக்கர் எனப்படும் இரட்டை-மாடி பேருந்துகளும் பிரபலமானவை. மும்பை போன்ற மாநகரங்களில் கூட்ட நெரிசலினால் டபுள்-டக்கர் பேருந்துகளுக்கு தேவை உள்ளதால், இத்தகைய நகரங்களில் இவ்வாறான பேருந்துகள் பொதுமக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மும்பையில் டபுள்-டக்கர் பேருந்துகள் எலக்ட்ரிக்கிற்கு மாறவுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநில சுற்றுலா & சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில், விரைவில் கிட்டத்தட்ட 900 எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்துகள் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Image Credit: BEST Undertaking
மேலும், இந்த 900 இ-டபுள்-டக்கர் பேருந்துகளை BEST என சுருக்கமாக அழைக்கப்படும் பிரஹன்மும்பை மின்சார வழங்கீடு மற்றும் போக்குவரத்து துறை தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெற்று பொது பயன்பாட்டிற்கு வழங்கவுள்ளதாகவும் ஆதித்யா தாக்கரேவின் ட்விட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பேருந்துகளுக்கு மாற்றாக 10,000 எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை டபுள்-டக்கர் பேருந்துகளாக இருக்கவே விரும்புவதாகவும் ஆதித்யா தாக்கரே தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இத்துடன், தனது கருத்தை ஏற்று கொண்டதற்காக BEST தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் ஆதித்யா தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார். மும்பை மட்டுமின்றி மற்ற மஹாராஷ்டிரா நகர ஆணையர்களிடமும் எலக்ட்ரிக் பேருந்துகள் & டபுள்-டக்கர் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதுதொடர்பான மஹாராஷ்டிரா அமைச்சரின் மற்றொரு டுவிட்டர் பதிவில், "முதல்வர் உத்தவ் தாக்கரேவும், நானும் தனிப்பட்ட முறையில் மும்பையின் இரட்டை அடுக்கு பேருந்துகளை புதுப்பிக்க ஆர்வமாக உள்ளோம்." என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மும்பை சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்கவும், மீண்டும் டபுள்-டக்கர் பேருந்துகளை நகரத்தில் கண்ணை கவரும் வகையில் கொண்டுவரவும் மஹாராஷ்டிரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏனெனில் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், விரைவாக ஆட்டோமொபைல் துறையில் எரிசக்தி மாற்றத்திற்கு மத்திய அரசும், மாநில அரசாங்கங்களும் கவர்ச்சிக்கரமான திட்டங்களை அறிவித்து வருகின்றன. இதன்படி, எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணிகளில் ஈடுப்படும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியங்கள் மாநிலத்திற்கு மாநிலம் ஆளும் அரசாங்கத்தை பொறுத்து வேறுப்படுகின்றன. இதனால்தான், எலக்ட்ரிக் வாகனங்களின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது. அதாவது, மாநில அரசுகள் வழங்கும் மானியத்திற்கு ஏற்ப இவி-களின் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகளில் ஏற்றங்களும், இறக்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

BEST ஆனது மும்பை உள்பட நவி மும்பை, தானே, மிரா-பாயாண்டர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சுமார் 25 லட்ச பயணிகளின் உயிருக்கு பொறுப்பாகும். மும்பை உள்பட இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் கூட பெரும்பான்மையாக தற்சமயம் டீசல் பேருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாசு இல்லா போக்குவரத்தை விரும்பினால், நிச்சயமாக பொது போக்குவரத்தில் முதற்கட்டமாக எலக்ட்ரிக்கை புகுத்த வேண்டும்.

எலக்ட்ரிக் பேருந்துகள் மட்டுமின்றி, அளவில் சிறிய பயணிகள் கார்களிலும் மின்மயமாக்கல் நுழைந்துவிட்டது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி, டாடா டிகோர் இவி மற்றும் எம்ஜி இசட்.எஸ் இவி உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன. இன்னும் மாருதி சுஸுகி, ஹூண்டாய் போன்ற மற்ற முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக்கில் நுழையவில்லை. இவையும் நுழைந்த பிறகுதான் ஆட்டம் இன்னும் சூடுப்பிடிக்கும்.


Click it and Unblock the Notifications








