மும்பை சாலைகளை கலக்க போகிறது... டபுள்-டெக்கர் பஸ்களின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தும் பெஸ்ட்
மும்பை நகரில் டபுள்-டெக்கர் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளை பெஸ்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், பெஸ்ட் (BEST - Brihanmumbai Electricity Supply and Transport) நிறுவனம் பேருந்துகளை இயக்கி வருகிறது. பெஸ்ட் நிறுவனம் வெகு விரைவில் 100 புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்கவுள்ளது. பெஸ்ட் நிறுவனத்திடம் தற்போது ஒட்டுமொத்தமாக 75 டபுள்-டெக்கர் பேருந்துகள் உள்ளன.

இந்த 75 பழைய டபுள்-டெக்கர் பேருந்துகளும் வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்கிராப் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதற்கு பதிலாக 100 புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை போல் அல்லாமல், புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளில், முன் பகுதியிலும், பின் பகுதியிலும் உள்ளே ஏறுவதற்கான வழி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதுகுறித்து பெஸ்ட் அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், நடத்துனர்களுக்கான தகவல் தொடர்பு தொகுப்பு உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது'' என்றனர். ஆனால் இந்த டபுள் டெக்கர் பேருந்துகளில் குளிர்சாதன வசதி இருக்காது.

இதற்கான டெண்டர் கடந்த நவம்பர் 11ம் தேதி கோரப்பட்டது. இதுகுறித்து பெஸ்ட் அதிகாரிகள் கூறுகையில், ''புதிய டபுள்-டெக்கர் பேருந்துகள் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும். ஆனால் தனித்துவமான டபுள்-டெக்கர் பேருந்துகளை நாங்கள் தொடர்ந்து இயக்குவோம்'' என்றனர். அதே நேரத்தில் டபுள்-டெக்கர் பேருந்துகளின் டிசைனில் மாற்றங்கள் செய்வது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சுமார் 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, புதிய டபுள்-டெக்கர் பேருந்துகள் வாங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 120 டபுள்-டெக்கர் பேருந்துகளை கைவசம் வைத்திருக்க பெஸ்ட் நிறுவனம் விரும்புவதாகவும் தெரிகிறது. இதில், 100 டபுள்-டெக்கர் பேருந்துகள் விரைவில் வாங்கப்படவுள்ளன. எஞ்சிய 20 டபுள்-டெக்கர் பேருந்துகள் அதன்பின் வாங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 896 பேருந்துகளை ஸ்கிராப் செய்வதற்கான நடவடிக்கைகளை பெஸ்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இதில் நாம் ஏற்கனவே கூறியபடி 75 டபுள்-டெக்கர் பேருந்துகளும் அடக்கம். இந்த பேருந்துகளின் வயது 15 ஆண்டுகளை கடந்து விட்டது. மிகவும் பழையதாகி விட்டதால், அவற்றை ஸ்கிராப் செய்து விடுவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
பெஸ்ட் நிறுவனம் முதலில் 120 டபுள்-டெக்கர் பேருந்துகளை இயக்கி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வெறும் 75 ஆக சுருங்கி விட்டது. எனவே அதனை மீண்டும் 120 ஆக உயர்த்துவதற்கான முயற்சிகளை பெஸ்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கெல்லாம் முன்னதாக கடந்த 1947ம் ஆண்டு, 242 டபுள்-டெக்கர் பேருந்துகள் இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டு வெறும் 122 ஆக குறைந்தது. அதன்பின் வந்த ஆண்டுகளில், டபுள்-டெக்கர் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து விட்டது. இது தொடர்பாக மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பொது மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதால், பேருந்துகளை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணிப்பதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில், பெஸ்ட் நிறுவனம் புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








