மனைவியின் நகைகளை விற்று பலருக்கும் உதவி செய்த ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த கதி... போலீஸ் மீது கடுப்பான மக்கள்...
தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு உதவி செய்து வந்த ஆட்டோ டிரைவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜாவேத் கான் பற்றிய செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இவர் தனது மனைவியின் நகைகளை விற்பனை செய்து, தனது ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். அத்துடன் அந்த ஆட்டோவில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த தகவலை அறிந்ததும், சமூக வலை தளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், போபால் காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு நேரத்தில் ஆட்டோவை இயக்கியதற்காகவும், அனுமதி இல்லாமல் ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்டு சென்றதற்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி வெளியே கசிந்த பின் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, ஜாவேத் கான் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் கைவிட்டனர்.

அத்துடன் அவருக்கு சிறப்பு அனுமதியையும் வழங்கியுள்ளனர். ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்களுக்கும், மருத்துவமனை செல்ல வேண்டிய தேவை உள்ளவர்களுக்கும் ஜாவேத் கான் இலவசமாக உதவி செய்து வருகிறார். இந்த சூழலில்தான் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது ஒரு குடும்பத்திற்கு அவர் உதவி செய்து கொண்டிருந்தார்.

ஆனால் காவல் துறையினருடன் தேவையில்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டதால், பொன்னான நேரத்தை இழந்ததாக ஜாவேத் கான் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஜாவேத் கான் கூறுகையில், ''ஒருவருக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தேவை என அழைப்பு வந்தது. ஆனால் பான்பூர் பகுதியை நான் அடைந்தபோது, பேரிகார்டுகள் வைத்து தடுக்கப்பட்டேன்.

அவசரமாக செல்ல வேண்டியுள்ளதால் என்னை அங்கிருந்து புறப்பட அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் எடுத்து கூறினேன். ஆனால் நான் கூறியதை அவர்கள் கேட்கவில்லை. அத்துடன் அனுமதி இல்லாமல் ஏன் ஆட்டோ ஓட்டுகிறாய்? என என்னிடம் கேட்க தொடங்கினர். இதன்பின் அவர்களிடம் ஆவணங்களை காட்டினேன். அனைத்தும் சரியாக இருந்தது.

ஆனால் காவல் துறையினர் எனக்கு அபராதம் எழுத தொடங்கி விட்டனர்'' என்றார். மேலும் தனது ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸாக பயன்படுத்தி வருவது குறித்த தகவலையும் காவல் துறையினரிடம் எடுத்து கூறியதாக ஜாவேத் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் செல்ல வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து காவல் துறையினரிடம் எடுத்து கூறினேன்.

ஆனால் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பதற்கு பதிலாக என் மீது வழக்கு பதிவு செய்து விட்டனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது உதவி செய்வது குற்றமா? நான் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் காரணமே இல்லாமல் காவல் துறையினர் என் மீது வழக்கு பதிவு செய்து விட்டனர்'' என்றனர்.

எனினும் இறுதியில் ஜாவேத் கான் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுவதாக போபால் காவல் துறையினர் அறிவித்து விட்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர் ஜாவேத் கானுக்கு காவல் துறையினரால் தற்போது சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








