ரொம்ப பெரிய மனசு... சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து மக்களின் ஹீரோவாக மாறிய ஆட்டோ டிரைவர்...
சேமித்த பணத்தை எல்லாம் செலவு செய்து ஆட்டோ டிரைவர் ஒருவர் மக்களின் ஹீரோவாக மாறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவில், ஆக்ஸிஜனுக்கு தற்போது கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், சமூக அக்கறை நிறைந்த பலர் தாங்கள் செய்யும் உதவிகள் மூலம் உண்மையான ஹீரோக்களாக உருவெடுத்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த ஜாவேத் கான் என்பவரும் அவர்களில் ஒருவர்.

ஆட்டோ ஓட்டுனரான ஜாவேத் கான் தனது திறமை மற்றும் மனித நேயத்தின் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். 34 வயதாகும் ஜாவேத் கான் தனது ஆட்டோவை தற்போது ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். இந்த ஆம்புலன்ஸில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனும் கிடைக்கும் என்பது முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ஜாவேத் கான் தன்னிடம் இருந்த சேமிப்புகளின் மூலம் ஆட்டோவை, ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். அவரது மனைவியின் சேமிப்பும் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஜாவேத் கான் நோயாளிகளுக்கு இலவசமாகதான் சேவை செய்து வருகிறார். கடந்த 3 நாட்களில் மட்டும் ஜாவேத் கானின் ஆட்டோ ஆம்புலன்ஸ் போபால் நகரில், 8-10 நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளது.

போபால் நகரில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர தொடங்கிய உடனேயே, அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என ஜாவேத் கான் முடிவு செய்தார். இதன்பின் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்த ஜாவேத் கான், இறுதியில் தனது ஆட்டோவை, ஆம்புலன்ஸாக மாற்றி விட்டார்.

அவரது சிறிய ஆட்டோ ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் வசதியுடன், சானிடைசர் மற்றும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜாவேத் கான் கூறுகையில், ''18 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது.

எனவே என்னிடம் இருப்பதை வைத்து கொண்டு சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். இதன்படி ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி சானிடைசர், சில மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்தேன்'' என்றார். ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக ஜாவேத் கான் தினமும் சுமார் 600 ரூபாயை செலவிட்டு வருகிறார்.

ஆனால் ஆக்ஸிஜனுக்கு தற்போது அதிக தேவை உள்ளதால், இந்த பணி சவால் மிகுந்ததாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் சிலிண்டரை மீண்டும் நிரப்புவதற்காக 4-5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாவேத் கான் தற்போது தனது ஆட்டோவில் சவாரி ஏற்றுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார்.

அதற்கு பதிலாக முழுக்க முழுக்க நோயாளிகளுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவிற்கு மூச்சு திணறி வரும் நிலையில், ஜாவேத் கான் போல் தினமும் ஹீரோக்கள் உருவாகி கொண்டுள்ளார். அந்த ஹீரோக்களுக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








