நல்லா உத்து பாத்து சொல்லுங்க... இந்த பையன் ஓட்டி வருவது ஸ்கூட்டரா? பின்னால பாத்தா 'ஸ்டன்' ஆய்ருவீங்க
8ம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ள வித்தியாசமான வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ஊரடங்கு பலரையும் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி போட்டு விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அவர்களின் கல்வி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சிலர் இந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து வருகின்றனர். இதற்கு ஹர்மன்ஜோத் ஒரு எடுத்துக்காட்டு. 8ம் வகுப்பு படித்து வரும் ஹர்மன்ஜோத், பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள லக்கோவல் என்ற கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா வைரஸ் ஊரடங்கு ஹர்மன்ஜோத்தை பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டில் முடக்கி விட்டது.

அந்த சமயத்தில் தனக்கு ஒரு சைக்கிள் வேண்டும் என தனது தந்தை வீர் தன்வீர் சிங்கிடம், ஹர்மன்ஜோத் கேட்டுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஹர்மன்ஜோத்திற்கு அவரால் சைக்கிள் வாங்கி தர முடியவில்லை. எனினும் இதற்காக ஹர்மன்ஜோத் கவலைப்படவில்லை.

தந்தையிடம் பணம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், பழைய பொருட்களின் மூலம் வித்தியாசமான சைக்கிள் ஒன்றை சுயமாக உருவாக்க முடிவு செய்தார். இதன்படி அவர் உருவாக்கியுள்ள சைக்கிள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹர்மன்ஜோத் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சைக்கிளை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் என இரண்டும் கலந்த கலவையாக அவரது கண்டுபிடிப்பு இருப்பதுதான் இதற்கு காரணம். இந்த கண்டுபிடிப்பை முன்னால் இருந்து பார்த்தால் ஸ்கூட்டர் போல இருக்கும். பின்னால் இருந்து பார்த்தால் வழக்கமான சைக்கிள் போன்று காட்சியளிக்கும். வழக்கமான சைக்கிள் போலவே இதனை 'பெடல்' செய்து ஓட்டி செல்ல முடியும்.

இதுகுறித்து ஹர்மன்ஜோத் கூறுகையில், ''கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் எனது தந்தையால் புதிய சைக்கிளை எனக்கு வாங்கி தர முடியவில்லை. எனவே நானும், எனது தந்தையும் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம்'' என்றார். இந்த கண்டுபிடிப்பை உருவாக்குவதற்கு 15 நாட்கள் செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உருவாக்கும் பணிகளில் ஹர்மன்ஜோத்தின் தந்தையும் நேரத்தை செலவிட்டு உதவி செய்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்காக சமூக வலை தளங்களில் ஹர்மன்ஜோத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 'தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்ற பொன்மொழிக்கு ஏற்ப, இந்த வித்தியாசமான சைக்கிளை ஹர்மன்ஜோத் உருவாக்கியுள்ளார்.

அவர் தனது கண்டுபிடிப்பை சாலையில் ஓட்டி செல்லும் காணொளி சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஹர்மன்ஜோத்தின் ஊரை சேர்ந்த ஏராளமானோர் இந்த வித்தியாசமான சைக்கிள் உடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு தற்போது ஆர்வம் காட்டுகின்றனர். இந்த தகவலை ஹர்மன்ஜோத் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
பொதுவாக இதுபோன்ற கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள். இதற்கு முன்பாகவும் இதுபோல் வித்தியாசமான பல வாகனங்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் தங்கள் வாகனத்தில், பல்வேறு விஷயங்களுக்கு பயன்படும் வகையில் மாற்றங்களும் செய்துள்ளனர். ஆனால் இவற்றில் இந்த ஸ்கூட்டர்-சைக்கிள் தனித்துவமானது.


Click it and Unblock the Notifications








