ஒரு தனி நபருக்காக இவ்வளவு பெரிய கார் பேரணி!! போலீசார் ஒருத்தரையும் விட போறது இல்ல!
பிக்பாஸ் பிரபலம் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் பொது சாலையில் கார்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவாறு பேரணி சென்றுள்ளார். இதனை அறிந்த போலீஸார் என்ன செய்தனர் என்பதையும், இத்தகைய செயலில் ஈடுப்பட்டவர்கள் எந்த பிக்பாஸ் பிரபலத்தின் ரசிகர்கள் என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக பலர் விரைவாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளனர். அவ்வாறு, இளம் வயதிலேயே ரசிகர்கள் பலரை பெற்றவர் யூடியூப்பர் எல்விஷ் யாதவ் ஆவார். இதன் மூலமாக பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸிலும் நுழைந்துள்ளார். தமிழ் பிக்பாஸில் இந்த பெயரில் யாரும் கலந்துக் கொள்ளவில்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. எல்விஷ் யாதவ், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியான பிக்பாஸ் ஒடிடி2-இல் கலந்து கொண்டிருப்பவர் ஆவார்.

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஒடிடி2 நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கலந்துக் கொண்டிருக்கும் யூடியூப்பரான எல்விஷ் யாதவ்விற்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் வெளியில் உருவாகியுள்ளது. இதனை எல்லாருக்கும் காட்டும் வகையில், எல்விஷ் யாதவ்வின் ரசிகர்கள் சந்திப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. எந்த அளவிற்கு என்றால், ஒரு யூடியூப்பரின் ரசிகர்கள் சந்திப்பு இந்தியாவில் இந்த அளவிற்கு பெரியதாக நடைப்பெற்றது கிடையாது என கூறப்படுகிறது.
அதாவது, அவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இந்த நிலையில் நொய்டாவில், இளைஞர்கள் சிலர் பிக்பாஸ் பங்கேற்பாளர் எல்விஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது புகைப்படங்கள் ஒட்டப்பட்ட கார்களில் வரிசையாக பேரணி சென்று கவனத்தை ஈர்த்துள்ளனர். நெடுஞ்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியில் அந்த இளைஞர்கள் காருக்குள் இருக்கையில் அமராமல், கதவுகளின் மீது அமர்ந்தவாறும், மேற்கூரையில் பாதி உடலை வெளியே நீட்டியவாறும் ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோவினை பலர் பகிர்ந்துக்கொள்ள, ஒரு கட்டத்தில் இந்த வீடியோ போலீசாரின் பார்வைக்கும் வந்துள்ளது. வீடியோவில் தெரிந்த கார்களின் பதிவெண்களை வைத்து சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பேரணியில் அனைத்து கார்களும் கருப்பு நிறத்தில் இருந்தன. இதில், பெரும்பாலான கார்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஸ்கார்பியோ என் கார்களாக உள்ளன.

சிலர், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி கார்களையும், கருப்பு நிற செடான் கார்களையும் கூட பேரணியில் ஈடுப்படுத்தி இருந்தனர். கார்களில் இவ்வாறு பேரணி செல்வதற்கு முன்னர் போலீஸாரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஏனெனில் இவ்வாறான கார் பேரணிகள் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளை பாதிக்கும். ஆனால் இந்த இளைஞர்கள் கார் பேரணிக்கு அனுமதியை பெறவில்லை, அத்துடன் கார்களில் ஆபத்தான முறையிலும் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேரணியில் 10க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றிருப்பதை வீடியோவில் காணலாம். ஆனால் தற்போதைக்கு இதில் 3 கார்களை மட்டுமே போலீஸார் அடையாளம் கண்டு, பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த 3 கார்களில் ஒரு ஹூண்டாய் வெர்னா காரும், இரு மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களும் அடங்குகின்றன. மற்ற கார்களை அடையாளம் காணும் முயற்சியில் தொடர்ந்து போலீஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொது சாலையில் கார்களின் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தவாறு பயணிப்பதே அபராதத்திற்கு உரிய குற்றமாக பார்க்கப்படும் நிலையில், இந்த இளைஞர்கள் கார்களின் கதவுகளில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளனர். இது முற்றிலும் ஆபத்தான செயலாகும். ஏனெனில், எதிர்பாராத விதமாக எடையை தாங்காமல் கதவு உடைத்து கீழே விழுந்தால், அதன் மீது அமர்ந்திருப்பவரும் கீழே விழ வேண்டியதுதான். பின்னால் வரிசையாக கார்கள் வருவதால், அவ்வாறு கீழே விழுந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்தாலே பயமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான சாகசங்களை செய்வதற்கு சாலைகள் இடம் கிடையாது என எத்தனை முறை போலீஸார் சொன்னாலும் சில இளைஞர்கள் கேட்பது போல் இல்லை. ஆதலால், இவ்வாறான செயல்களில் ஈடுப்படும் இளைஞர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications