மலிவான விலையில் வெங்காயம் வாங்க குவிந்த மக்கள்... பயத்தில் வியாபாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?
மலிவான விலையில் வெங்காயம் வாங்க அதிகாலை முதல் மக்கள் குவிந்ததால், பயத்தில் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் செய்த ஒரு காரியம் கவனம் ஈர்த்துள்ளது.

கார்களுடன் ஒப்பிடும்போது, டூவீலர்கள்தான் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் விபத்துக்குளில் உயிரிழப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், விபத்தில் உயிரிழப்பதற்கான வாய்ப்பை குறைக்க முடியும். சாலை விபத்தின்போது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலையில் அடிபடுவதை ஹெல்மெட் தடுக்கிறது.

எனவே இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிர் பிழைத்து கொள்ள முடியும். அத்துடன் மருத்துவமனையில் வீணாக செலவிடுவதையும் தவிர்க்கலாம். தலையில் அடிபடுவது அல்லது மரணத்திற்கு எதிரான முழுமையான பாதுகாப்பை ஹெல்மெட் வழங்குகிறது. எனவே இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை கண்டு கொள்வதே இல்லை. டூவீலர்களில் பயணம் செய்பவர்களே ஹெல்மெட் அணிவதில் அதிக ஆர்வம் காட்டாத சூழலில், வெங்காய விற்பனையில் ஈடுபட்ட ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்களது வியாபாரத்தை கவனித்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றான வெங்காயத்திற்கு இந்தியாவில் தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயத்தை இருப்பு வைக்கும் விஷயத்தில், வியாபாரிகளுக்கு அதிரடியாக உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்து, தட்டுப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியிலும் முக்கியமான நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் 75 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் வெங்காய விலை உயர்வை கிண்டல் அடிக்கும் வகையில், சமூக வலை தளங்களில் தற்போது அதிக அளவிலான மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் மலிவான விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி கொண்டுள்ள சூழலில், அங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பாட்னாவில் உள்ள அரசின் கூட்டுறவு அங்காடியில்தான் இவ்வாறு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு வெங்காயம் விற்பனை செய்த கூட்டுறவு அங்காடி ஊழியர்கள், ஹெல்மெட் அணிந்திருந்தனர். இதற்கு அவர்கள் அளித்த வித்தியாசமான பதில்தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''நாங்கள் மலிவான விலையில் வெங்காயம் விற்பனை செய்கிறோம். எனவே எங்கள் மீது யாரேனும் கல்வீசி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதில் இருந்து எங்களை பாதுகாத்து கொள்ளவே நாங்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயத்தை விற்பனை செய்கிறோம்'' என்றனர்.

கூட்டுறவு அங்காடியில் மலிவான விலையில் வெங்காயத்தை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக நீண்ட வரிசையில் 'க்யூ' நின்று கொண்டிருந்தது. ஒரு சிலர் அதிகாலை 4 மணி முதல் வரிசையில் காத்திருந்து வெங்காயத்தை வாங்கி சென்றனர். நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாமல், யாரேனும் பொறுமையிழந்து கல் வீச்சு தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ஊழியர்களிடம் இருந்தது.

போதாக்குறைக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட எவ்விதமான பாதுகாப்பு வசதிகளையும் நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவேதான் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தலைகவசம் அணிந்தபடி வெங்காய விற்பனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்கு எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை என அங்கு ஊழியர்கள் புலம்புவதையும் காண முடிந்தது.

தலையில் காயம் ஏற்படுவதை தடுக்கும் விஷயத்தில், ஹெல்மெட்டின் அவசியத்தை வெங்காய வியாபாரிகள் கூட புரிந்து கொண்டுள்ள சூழலில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தலை கவசத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டிய நேரமிது. மோட்டார்சைக்கிள் விபத்துக்களில் உயிரிழப்பு நிகழ்வதற்கான முக்கிய காரணம் தலையில் ஏற்படும் காயம்தான்.

தலையில் காயம் ஏற்படுவதை தவிர்ப்பதுடன், கண்களில் காயம் உண்டாகாமல் இருக்கவும் ஹெல்மெட் மிக அவசியம். தூசி மற்றும் குப்பைகள் வந்து கண்ணில் விழுவதால், சாலை விபத்து ஏற்படும் வாய்ப்பையும் ஹெல்மெட் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெல்மெட் அணிவதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாகவும் மாற முடியும்.

ஆனால் வெறுமனே ஏதோ ஒரு ஹெல்மெட்டை அணிந்தால் மட்டும் போதாது. தரமற்ற ஹெல்மெட்கள் எந்த வகையிலும் உங்களுக்கு பலன் அளிக்காது. உங்கள் தலைக்கு ஏற்ற மற்றும் தரமான ஹெல்மெட்களை வாங்கி உபயோகப்படுத்துங்கள். இதன் மூலம் போலீசார் விதிக்கும் அபராதங்களில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








