குடும்ப சொத்துகளை விற்று இலவசமாக ஹெல்மெட்களை வழங்கிவரும் பீகார் நபர்!! ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு...!
கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 49,000 ஹெல்மெட்களை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ள பீகார் நபர் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆட்டோமொபைல் துறையில் நாளுக்கு நாள் தொழிற்நுட்பங்களின் தரங்கள் மேம்பட்டு வருகின்றன. வாகனங்களின் செயல்படுதிறனை அதிகப்படுத்தும் வகையிலான தொழிற்நுட்பங்கள் உடன் பயணிகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தக்கூடிய தொழிற்நுட்பங்களும் புதியது புதியதாக கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இருசக்கர வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்று பார்த்தால், விரல் விட்டு எண்ணிவிடும் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல் போன்றவற்றை கூறலாம். இருப்பினும் இவையும் சற்று விலைமிக்க இருசக்கர வாகனங்களிலேயே வழங்கப்படுகின்றன.

நம் இந்தியா இன்னமும் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் பெரும்பாலான 2-வீலர்ஸின் விலை ரூ.1 லட்சம் அல்லது அதற்கு உள்ளாகவே உள்ளன. இத்தகைய 'பட்ஜெட்' இருசக்கர வாகனங்களில் அதிகளவில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களை வழங்குவது என்பது முடியாத காரியமாகும். ஏனெனில் அவ்வாறு புதிய வசதிகளை கொண்டுவந்தால் வாகனத்தின் விலையினை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும்.

ஆதலால் தற்போதைக்கு டபுள்-சேனல் ஏபிஎஸ் உடன் இருசக்கர வாகனத்தை வாங்கினாலே பெரிய விஷயம். இதனால்தான் வாகனத்தில் எத்தனை பாதுகாப்பு அம்சங்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும், இருப்பினும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிறது காவல்துறை.

சாலை விபத்துகளின்போது ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்கள் ஏராளம். இவ்வாறு ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்தில் உயிரிழந்த தனது நண்பனை நினைவுக்கூறும் விதமாகவே நாம் இந்த செய்தியில் பார்க்கப்போகும் பீகார் நபர் ஹெல்மெட்களை வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

இவரை பற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்த நபரது பெயர் ராகவேந்திரா குமார். வயது 34. இவர் கடந்த 7 வருடங்களில் ஏறக்குறைய 49 ஆயிரம் ஹெல்மெட்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளார். இதற்காக இவர் தற்போதுவரையில் செலவழித்துள்ள பணம் எவ்வளவு தெரியுமா? சுமார் 2 கோடி ரூபாய்.

தனது குடும்ப சொத்துகளை விற்றவர், தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள க்ரேட்டர் நொய்டாவில் இருந்த தனது வீட்டையும் விற்று இந்த சமூக சேவையை ஆற்றி வருகிறார். 'இந்தியாவின் ஹெல்மெட் மேன்' என்கிற பட்டத்தை இந்த செயல்பாடுகளுக்காக ராகவேந்திரா குமாருக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து ராகவேந்திரா குமார் கருத்து தெரிவிக்கையில், "2014ஆம் ஆண்டு பீகாரின் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த எனது நண்பர் கே.கே.தாகூர், நொய்டாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். ஹெல்மெட் அணியாததால் அவர் உயிரிழந்தது தெரிய வந்ததை அடுத்து, அன்று முதல் அவரது நினைவாக ஹெல்மெட் விநியோகம் செய்து வருகிறேன்" என கூறினார்.

டெல்லி, பீகார், உத்திர பிரதேசம், மத்திர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா என மொத்தம் 22 மாநிலங்களில் கடந்த 7 வருடங்களாக இதுவரையில் 49,272 ஹெல்மெட்களை வாகன ஓட்டிகளுக்கு இவர் இலவசமாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய ராகவேந்திரா குமார், "பிரதமர் நரேந்திர மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் மட்டும் கிட்டத்தட்ட 6,500 ஹெல்மெட்களை வழங்கியுள்ளேன். நான் கொடுத்துள்ள ஹெல்மெட்கள் அனைத்துமே முன்னணி பிராண்ட்களின் தயாரிப்புகளாகும். இந்த சேவையினை நிறுத்தி கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனெனில் இதன் மூலமாக எனது நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார்.

இருப்பினும் நிதி நெருக்கடியினால் ஹெல்மெட்களை வாகன ஓட்டிகளுக்கு தானமாக வழங்க சில தனியார் நிறுவனங்களின் உதவியை இவர் நாடியுள்ளார். மேலும் இந்த சமூக சேவை பணிகளுக்காக 'ஹெல்மெட்மேன்' என்ற பெயரில் இணையத்தள பக்கத்தையும் பராமரித்து வருகிறார். இதில் பல்வேறு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள், முகவரியுடன் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








